ஐடி ரெய்டுகள் என்னாச்சு.. ஏன் திடீர்னு நின்னு போச்சு??
தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பி வந்த வருமான வரி சோதனைகள் திடீரென நின்று போனது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னை: ஹைதராபாத்திலிருந்தும், பெங்களூரிலிருந்தும் ஏகப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளை வரவழைத்து சென்னையில் படு பரபரப்பாக ஆலோசனைக் கூட்டமெல்லாம் நடத்தி, மிகப் பெரிய சோதனகைள் நடைபெறப் போவதாக செய்தி பரவிய நிலையில் அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்பதே தெரியவில்லை. ஐடி ரெய்டுகள் திடீரென அப்படியே நின்று போய் விட்டன.
ராமமோகன ராவ் விவகாரம் அப்படியே அமுங்கிக் கிடக்கிறது. அதன் பாலோ அப் என்ன என்றே தெரியவில்லை. ராமமோகன ராவ் பேச்சையே காணோம். அவரது மகனை விசாரிக்கும் விஷயத்திலும் வருமான வரித்துறை நிதானம் காட்டுகிறது.
பாவை பொறியியல் கல்லூரியில் நடந்த ரெய்டில் என்ன சிக்கியது என்ற விவரமும் வெளியாகவில்லை. அந்த ரெய்டு எதற்காக என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

சரமாரி ரெய்டுகள்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் திடீரென ஐடி ரெய்டுகள் அதிகரித்தன. சரமாரியான ரெய்டுகளால் தமிழகமே கலங்கிப் போனது.

சிக்கிய திமிங்கலங்கள்
இந்த ரெய்டின்போது சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் சிக்கினர். அவர்கள் வைத்திருந்த கட்டுக்கட்டான கோடிக்கணக்கான பணக் குவியலைப் பார்த்து தமிழகம் அதிர்ந்தது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தலைமைச் செயலகத்தில் ரெய்டு
உச்சக்கட்டமாக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகான ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சிஆர்பிஎப் போலீஸ் துணையுடன் நடந்த ரெய்டுதான் பெரும் பரபரப்பாக அமைந்தது.

ராவின் ஆவேசக் கூச்சல்
இந்த ரெய்டுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராமமோகன ராவ் படு ஆவேசமாகப் பேசினார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசை கடுமையாக விமர்சித்தார். புரட்சித் தலைவி அம்மா இருந்திருந்தால் என்று அதிமுக விசுவாசம் காட்டினார்.

அவ்வளவுதான்
இத்தோடு கிட்டத்தட்ட எல்லாமே முடிந்து போய் விட்டது. அதாவது அதற்குப் பிறகு ரெய்டுகளைக் காணோம். ராமமோகன ராவ் விவகாரத்திலும் அடுத்து எதுவுமே நடக்கவில்லை. மொத்தத்தில் எல்லாமே கிடப்பில் போடப்பட்டு விட்டதாக தெரிகிறது. பெங்களூர், ஹைதராபாத் அதிகாரிகளும் திரும்பிப் போய் விட்டதாக தெரிகிறது.

எதற்காக ரெய்டு!
எதற்காக இந்த ரெய்டுகள் நடந்தன. ஏன் பரபரப்பைக் கிளப்பியது வருமான வரித்துறை என்பதற்கெல்லாம் யாருக்குமே காரணம் தெரியவில்லை. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட ரெய்டு என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.

சசிகலாவைக் குறி வைத்து
குறிப்பாக சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராகி விடக் கூடாது, முதல்வர் பதவிக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த ரெய்டுகள் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் சசிகலா தற்போது கட்சிப் பதவியைக் கைப்பற்றி விட்டார். முதல்வர் பதவியிலும் உட்காரப் போகிறார். இதனால்தான் ரெய்டுகளை வைத்து அவரை வழிக்குக் கொண்டு வர முடியாது என்பதால் ரெய்டுகளை நிறுத்தி விட்டனரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் உலவி வருகிறது.












Click it and Unblock the Notifications