சென்னை டூ திண்டுக்கல்.. திடீரென குறுக்கே வந்த நாய்.. நிலம் வாங்க கொண்டு சென்ற 12 லட்சம் சாம்பல்
பெரம்பலூர்: இப்படியுமா இந்த உலகத்தில் நடக்கும் என்பது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.இதில் சிலர் நேரம் சரியில்லை என்று விமர்சிப்பார்கள். சிலர், ஆள் தப்பித்தாரே அது போதும் என்றும் கூறுவார்கள். அப்படி என்ன நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் வசிக்கிறார்கள்.அவர்கள் சொந்த ஊரில் இடம் வாங்க 12 லட்சம் பணத்துடன் சென்றுள்ளனர். இந்நிலையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கவிழ்ந்தது. இதில் நிலம் வாங்க கொண்டு சென்ற ரூ.12 லட்சம் எரிந்து சாம்பலானது. 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
நிலம், வீடு, வீட்டு மனை வாங்குவது என்பது பலருக்கும் கனவாக உள்ளது. ஏனெனில் வாழ்க்கையில் ஒரு முறை அல்லது இருமுறை தான் பெரும்பாலான மக்களால் வாங்க முடியும். அதற்கே வாழ்நாள் முழுக்க உழைக்க வேண்டும். அந்த நிலம் அல்லது வீட்டை சொந்த ஊரிலோ அல்லது குடியிருக்கும் ஊரிலோ வாங்க வேண்டும் என்பது தான் பலரது லட்சியமாக உள்ளது.

அப்படித்தான் சென்னையில் வசிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நல்லையா குடும்பத்தினர், தங்களது சொந்த ஊரான திண்டுக்கல் அருகே கனப்பாடி கிராமத்தில் நிலம் வாங்க விரும்பினார்கள். இதற்காக சேர்த்து வைத்த 12 லட்சம் பணத்துடன் புறப்பட்டு சென்றார்கள். சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு சென்றார்கள்.
அந்த காரில் திண்டுக்கல் மாவட்டம் கனப்பாடி கிராமத்தை சேர்ந்த நல்லையா (வயது 34), அவரது மனைவி சத்தியா (27), மகன் மதுமித்ரன் (1), இவர்களது நண்பர் நாகராஜ் மனைவி சரஸ்வதி (35), இவரது குழந்தைகள் இலக்கியா (16), சபரிநாதன் (12) ஆகிய 6 பேர் இருந்தனர். கார் சென்னையில் இருந்து புறப்பட்டு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டையை கடந்து பெரம்பலூர் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் சென்ற போது, திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது.
இதைப்பார்த்ததும் அந்த வழியாக சென்னையில் இருந்து சென்ற காரின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது, பின்னால் சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற நல்லையாவின் கார் மீது மோதியது. மேலும் அந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் அந்த காரில் இருந்த திண்டுக்கல் மாவட்டம் கனப்பாடி கிராமத்தை சேர்ந்த நல்லையா, அவரது மனைவி சத்தியா , மகன் மதுமித்ரன் , இவர்களது நண்பர் நாகராஜ் மனைவி சரஸ்வதி , இவரது குழந்தைகள் இலக்கியா , சபரிநாதன் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அவர்கள் சென்ற கார் தீப்பிடித்ததில் நல்லையா சொந்த ஊரில் நிலம் வாங்க கொண்டு சென்ற ரூ.12 லட்சமும் எரிந்து சாம்பல் ஆனது.ஆனால் அதேநேரம் நாய் வந்தால் விபத்தில் பிரேக் போட்டு நின்ற காரில் இருந்த 4 பேர் காயமின்றி தப்பினார்கள். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications