EVM வாக்குப்பதிவு இயந்திரம் கிட்ட குழம்பிய சிவகங்கை மக்கள்.. டக்னு நின்ற பூத்.. காலையிலேயே என்னாச்சு
சிவகங்கை: சிவகங்கை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்தந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் நிலவியது.. தேர்தல் ஆணையம் உடனடியாக மாற்று இயந்திரங்களை ஏற்பாடு செய்து வரும் நிலையில், இந்தத் தொழில்நுட்பத் தடங்கல் வாக்காளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி விட்டது.
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணி முதல் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

நீண்ட வரிசையில் வாக்காளர்கள்
மாலை 6 மணி வரை தடையின்றி 11 மணி நேரம் இந்த வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளும் தயார் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முதல் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த மையங்களுக்குக் கொண்டு வரப்பட்டன.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே, காலை 6 மணி அளவில் அனைத்து மையங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்படுகின்றனவா, நாம் அழுத்தும் சின்னத்திற்குத்தான் வாக்குகள் பதிவாகின்றனவா என்பதை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
முதியவர்கள், முதல்முறை வாக்காளர்கள்
இதைத் தொடர்ந்து 7 மணி முதல் பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. பல இடங்களில் முதியவர்களும், முதல்முறை வாக்காளர்களும் மிகுந்த உத்வேகத்துடன் வாக்களிப்பதைக் காண முடிகிறது.
இருந்தாலும், தொடக்கத்திலேயே சில இடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் வாக்காளர்களைச் சோர்வடையச் செய்துள்ளன. குறிப்பாக ஈரோடு சம்பத் நகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
EVM இயந்திரம் திடீரென வேலை செய்யாமல் நின்றதால், நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் இயந்திரத்தைச் சரிசெய்யும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம், ஈரோடு EVM மிஷின்
இதேபோல விழுப்புரம் தொகுதியிலும் 182-வது வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பமே இப்படித் தடங்கல்களுடன் இருப்பது வாக்காளர்களைக் கடுப்படையச் செய்துள்ளது. ஜனநாயகத்தின் மிக முக்கியமான கடமையைச் செய்ய வந்த இடத்தில், இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது நேரத்தை விரயமாக்குவதோடு, மக்களின் ஆர்வத்தையும் குறைப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேர்தல் ஆணையம் இதுபோன்ற இயந்திரக் கோளாறுகளை சரிசெய்ய கூடுதல் பொறியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருந்தாலும், பல இடங்களில் ஒரே நேரத்தில் சிக்கல் எழும்போது அது பெரும் சவாலாக மாறுகிறது.
குறிப்பாக கோடை வெயில் அதிகரிப்பதற்கு முன்னதாகவே வாக்களித்துவிட வேண்டும் என்று நினைத்து வரும் முதியவர்களுக்கு இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியிருந்தாலும், ஒரு சில இடங்களில் நிலவும் சிறு இடையூறுகளைத் தாண்டி, தமிழகத்தின் பிற பகுதிகளில் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு மக்கள் தொடர்ந்து வாக்குச்சாவடிகளை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
பாளையங்கோட்டை, சிவகங்கை, மதுரை
அதேபோல பாளையங்கோட்டை தொகுதி 163-வது வாக்குச்சாவடியில் இயந்திரக் கோளாறால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தடைபட்டு மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்த நிலையில், விருதுநகர் ராஜபாளையம் சங்கபாண்டிபுரத்தின் 100-வது பூத், உத்தரமேரூர் 22-வது பூத் மற்றும் திருவொற்றியூர் தொகுதியின் 231, 233-வது வாக்குச்சாவடிகளிலும் மின்னணு இயந்திரக் கோளாறுகளால் வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதேபோல் மதுரை மேற்கு தொகுதியின் 316-வது பூத்தில் விவிபேட் இயந்திரத்தில் பதிவு செய்த வாக்குகள் காட்டப்படாததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின் புதிய இயந்திரம் மாற்றப்பட்டதுடன், மதுரை கிழக்கு மாங்குளம் பகுதியில் போதிய விளக்கு வசதி இல்லாததால் அதிகாரிகளுடன் முகவர்கள் மோதலில் ஈடுபட்டனர்,
மேலும் சிவகங்கை மாவட்டத்தின் புதுப்பட்டி மற்றும் புலிக்கண்மாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் தொட்டபாவி கிராமத்தின் 162-வது பூத், ராமேஸ்வரம் நகைக்கடை பஜார் அரசு பள்ளி ஆகிய இடங்களிலும் இயந்திரப் பழுதுகளால் வாக்குப்பதிவு நீண்ட நேரம் தாமதமானதால் ஒட்டுமொத்த தேர்தல் களத்திலும் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications