அடுத்த என்ட்ரி அங்கயா? எடப்பாடி கோட்டையில் கால் வைக்கும் ஓபிஎஸ்.. நெக்ஸ்ட் ‘மூவ்’.. பரபர ஆலோசனை!
சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். திருச்சியை அடுத்து கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஸ் அணி திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இனி ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொடி, சின்னம் என எதையும் உரிமை கொண்டாட முடியாது, அப்படி செய்தால் அது சட்டப்படி குற்றம் என ஓபிஎஸ் தரப்பை எச்சரித்து வருகின்றனர் எடப்பாடி பழனிசாமி அணியினர்.

திருச்சி மாநாடு : இதற்கிடையே கடந்த ஏப்ரல் ஏப்ரல் 24ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். அதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பன்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினர்.
இந்நிலையில், அண்மையில் தனது சகாக்களோடு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை சேர்க்கத் தேவையில்லை, அவர்கள் அணியில் இருந்து பலரும் நம் பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள், ஓபிஎஸ் உறுதியாக வேண்டாம் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அடுத்த மூவ் : ஆனால் ஓபிஎஸ் தரப்போ கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் ஈபிஎஸ்ஸுக்கு எதிரான மூவ்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருச்சியில் நடைபெற்ற மாநாட்டைப் போல கொங்கு மண்டலத்திலும், மதுரையிலும் மாநாட்டை நடத்த ஓபிஎஸ் தரப்பு தயாராகி வருகிறது. இந்த மாதத்துக்குள் மாநாடு நடத்தவும், மாநாடு முடிந்த பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ஓபிஎஸ் அணி திட்டமிட்டுள்ளது.

இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார். கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவது குறித்து ஓபிஸ் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிர்வாகிகளுடன் ஆலோசனை : இந்த ஆலோசனையில், மக்கள் மன்றத்தை நாடிச் செல்வது தங்கள் பலத்தை அதிகரிக்கும் என்பதால், விரைவாகவே அடுத்தடுத்த மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் நடத்துவது என ஓபிஎஸ் அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, எடப்பாடி தரப்பின் கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.

கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "தொண்டர்களின் எழுச்சி மாநாடாக திருச்சி மாநாடு நடைபெற்றது. திருச்சி மாநாடு பெரும் வரவேற்பைப் பெற்று, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மற்றும் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications