234 நாட்கள் சிறைவாசம்... கணவரால் கிடைத்த பரோல்... என்ன செய்வார் சசிகலா?
234 நாட்களுக்குப் பின்னர் சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் நிலையில் அவருக்கு கடுமையான 18 நிபந்தனைகளை சிறைத்துறை விதித்துள்ளது.
பெங்களூரு : 234 நாட்களுக்குப் பிறகு பரோலில் வரும் சசிகலாவின் வருகையால் அதிமுகவினர் பரபரப்பு அடைந்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகிச் சென்றாலும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஜெயலலிதா போல கட்சியையும், ஆட்சியையும் நடத்த நினைத்தார் சசிகலா. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் சசிகலாவின் தண்டனையை உறுதிசெய்ததால் பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் சசிகலாவின் அண்ணி இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோரும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
அதிமுகவிலும், தமிழகத்தில் தன்னால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிச்சாமியே தனது குடும்பத்தை கட்சி இருந்து விரட்ட காரணமாக அமைந்து விட்டாரே என்று கொந்தளிப்பில் இருந்தார் சசிகலா. உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தண்டனையில் இருந்து விலக்கு பெறலாம் என்று நினைத்து மனு தாக்கல் செய்தார் சசிகலா.

கைகொடுத்த கணவர்
ஆனால் அந்த மறுசீராய்வு மனுவும் சசிகலாவிற்கு கை கொடுக்கவில்லை. இதனால் சசிகலா தனது தண்டனைக் காலமான 4 ஆண்டுகளில் இருந்து தப்பிக்கவே முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video


15 கேட்டால் 5 மட்டுமே கிடைத்தது
இதனையடுத்து அவரை கவனித்துக் கொள்வதற்காக பரோலில் விட வேண்டும் என்று சிறைத்துறைக்கு கோரிக்கை விடுத்தார் சசிகலா. நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை முடிந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கணவரை பார்த்துக் கொள்ள 15 நாட்கள் பரோல் கேட்டார் சசிகலா. ஆனால் 5 நாட்கள் மட்டும் பரோல் கொடுத்துள்ளது கர்நாடகா சிறைத்துறை.

அரசியல் ரீதியான சந்திப்பு கூடாது
ஆனால் இந்த 5 நாட்களுக்கும் 18 கடுமையான நிபந்தனைகளை சிறைத்துறை விதித்துள்ளது. உறவினர் வீட்டில் மட்டுமே தங்க வேண்டும், மருத்துவமனைக்கு சென்று கணவரை பார்த்துக் கொள்ள வேண்டும், அரசியல் ரீதியாகவோ தனிநபர்களையோ சந்திக்கக் கூடாது என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது.

நடராஜனை பார்த்துக் கொள்ள
இந்நிலையில் சசிகலா, இளவரசி மகள் கிருஷ்ணப்ரியாவின் தியாகராய நகர் வீட்டில் தங்க உள்ளதாக தெரிகிறது. இங்கிருந்து தான் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சசிகலா தினந்தோறும் பார்த்துக் கொள்ள செல்ல உள்ளார்.

போயஸ் கார்டன் சென்றால் பிரச்னை
சிறைத்துறை கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதால் போயஸ் கார்டன் வீட்டிற்கு சசிகலா செல்ல மாட்டார் என்றே தினகரன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு உள்ள நிலையில் சசிகலா போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்றால் தேவையில்லாத குடைச்சல் கொடுக்கக் கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர். இதனால் பரோலில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இந்த முறை சசிகலா போயஸ் கார்டன் வீட்டிற்கு செல்ல மாட்டார் என்று தினகரன் தரப்பினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications