கர்நாடகத்திற்கு நீரை அதிகமாகத் தர வேண்டிய தேவை என்ன?: பெ.மணியரசன் கேள்வி
கர்நாடகத்திற்கு அதிக அளவிலான காவிரி நீரைத் தர வேண்டிய தேவை என்ன என்று பெ.மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை : ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கான நீரின் அளவைக் குறைத்து கர்நாடகத்திற்கு அதிகப்படுத்தித் தரவேண்டிய அவசியம் என்ன என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்துக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே 2007ம் ஆண்டு நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்கப்பட்ட உத்தரவை விட, தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும்.
இந்தத் தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகம் தொடர்ந்து அனைத்து விதங்களிலும் வஞ்சிக்கப்பட்டே வருகிறது. ஒவ்வொரு முறை தீர்ப்பின் போதும், தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட்டே வந்திருக்கிறது.
70 டிஎம்சி தண்ணீர் அதிகமாகக் கேட்ட நிலையில், ஏற்கனவே இருந்ததை விட 14.75 டிஎம்சி குறைத்து, கர்நாடகத்திற்கான நீர் அளவை அதிகப்படுத்தி இருப்பது வேதனை அளிக்கிறது.
மேலும், 11 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கான நீரை மட்டுமே கர்நாடகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பில் சொல்லப்பட்டு இருந்த நிலையில், தற்போது 18 லட்சம் ஏக்கருக்கான் தண்ணீர் கர்நாடகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் தமிழகத்திற்கு படிப்படியாக அளவு குறைக்கப்பட்டே வருகிறது. கர்நாடகத்திற்கு நீரை அதிகமாகத் தரவேண்டிய அவசியம் என்ன?. சட்டவிரோதமாக, நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் உரிமை தொடர்ந்து இந்திய அரசியலுக்காகப் பலியிடப்பட்டு வருகிறது. அதையே தான் நீதிமன்றமும் தற்போது செய்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.