திடீரென கர்நாடக ஆளுநர் பற்றி ரஜினிகாந்த் விமர்சிக்க காரணம் என்ன?
Recommended Video

சென்னை: கர்நாடகாவில் ஆளுநர் வஜுபாய் வாலா நடவடிக்கை சரியில்லை என காலம் கடந்து ரஜினிகாந்த் கருத்து கூறியதன் பின்னணி என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளனர்.
எடியூரப்பா அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்த நிலையில், உச்சநீதிமன்றம், 2 நாட்களிலேயே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது.
அதற்குள்ளாக குதிரை பேரம் நடத்த முடியவில்லை என்பதால், ஆட்சியை துறந்தார் எடியூரப்பா.

தாமதமான கருத்து
இதுகுறித்து நேற்றுதான் கருத்து தெரிவித்தார் ரஜினிகாந்த். பேட்டியொன்றில் அவர் கூறுகையில், கர்நாடக ஆளுநரின் செயல்பாடு சரியில்லை என்றார். ஆனால் இதை உச்சநீதிமன்றமே சொல்லிதான், 2 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கூறியது.

பாஜகவுக்கு கெட்ட பெயர்
மேலும் பாஜக தலைவர்கள் பலரும், காங். எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆடியோக்களை காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்டபடி இருந்தனர். இதனால் பாஜகவிற்கு தேசிய அளவில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

அனுதாபம் இல்லை
எனவேதான் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தபோதிலும், அது பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தவில்லை. இதை உணர்ந்து கொண்டுதான், ஊரோடு ஒத்துப்போய்விடுவோம் என்று ரஜினிகாந்த் இவ்வாறு ஒரு கருத்தை கூறியுள்ளாராம்.

பாஜக பி டீம்
பாஜகவின் பிடீம் என்று ரஜினிகாந்த் எதிர்க்கட்சிகளால் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். எனவே, இதை தவிர்க்க பாஜகவுக்கு எதிராக ஒரு கருத்தை ரஜினி கூறியுள்ளார். அதுவும் கூட எல்லாம் முடிந்த பிறகு, வலிக்காத அளவுக்கான கமெண்ட்தான்.

சமூக வலைத்தளங்களில் கருத்து
இதை வைத்து அவரது ரசிகர்கள், ரஜினிகாந்த் பாஜகவுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி வருகிறார்கள். இதைத்தான் அவரும் எதிர்பார்த்திருந்தார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இப்படி கற்பனையிலேயே எத்தனை காலம் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கப் போறாரோ இந்த "முத்து"!!












Click it and Unblock the Notifications