விஜய் இப்படி பேசியதில் என்னா தப்பு..?
Recommended Video

சென்னை: தமிழக அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் நெத்தியடியாய் வந்ததிருக்கிறது விஜய்யின் மெர்சல் பட வசனங்கள். நேரில் நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போல படு ஷார்ப்பாக பேசித் தள்ளியிருக்கிறார் விஜய். சாதாரண விமர்சனத்தையே தாங்க முடியாதவர்கள் நமது அரசியல்வாதிகள். இது அவர்களை சுட்டிருப்பதில் ஆச்சரியம் இல்லைதான்.
விஜய் படத்தில் சமீப காலமாக நாட்டு நடப்புகளை வைத்து பளீர் வசனங்கள் வருவது அதிகரித்திருக்கிறது. கத்தியில் 2ஜியை வைத்து அவர் போட்ட போடு யாராலும் மறக்க முடியாதது. இப்போது மெர்சல் படத்தில் அரசியல்வாதிகளை (அரசியல்வியாதிகளை என்றும் கூட சொல்லலாம். தப்பே இல்லை) போட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார்.
விஜய் பட வசனத்தைப் பொறுக்க முடியாமல் அரசியல் தலைவர்கள் கண்டன வாந்தியை எடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். விஜய்யை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை போலும்! ஆனால் விஜய் பேசிய வசனம் உண்மையிலேயே மக்களை யோசிக்க வைத்துள்ளது.

புறக்கணிக்கப்படும் அரசு மருத்துவமனைகள்
படத்தில் விஜய் பேசும் முக்கியமான ஒரு வசனம் 'அனைத்து அமைச்சர்கள், முதலமைச்சர், கவர்னர், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எல்லோரையும் அரசு மருத்துவமனையில்தான் சேர்க்கணும்னு சட்டம் கொண்டுவந்தா, அரசு மருத்துவமனைகளின் தரம் தானாக உயரும்' என்பதாகும். தியேட்டரில் கூட்டம் கட்டி ஏறி கை தட்டி மகிழ்கிறது இந்த வசனத்தைக் கேட்டு.

விஜய் பேசியது சரித்தான்
உண்மைதான். இன்று எத்தனை "அரசியல்வியாதிகள்" அரசு மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள். கவர்னர் முதல் சாதாரண கவுன்சிலர் வரை முதலில் நாடுவது தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளைத்தானே. அரசு மருத்துவமனைக்கு யார் செல்கிறார்கள். அதெல்லாம் பாவப்பட்ட சாதாரண மக்களுக்கு மட்டும்தான் என்பது அவர்களின் தீர்ப்பு.

அன்று கக்கன் இருந்தார்
இவர்கள் எல்லாம் என்ன காமராஜரா இல்லை கக்கனா. அரசு மருத்துவமனைகளை மட்டுமே நாடி எளிய முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓயாமல் ஒழியாமல் மக்களுக்கு சேவை மட்டுமே செய்வதற்கு. இவர்கள் எல்லாம் 21ம் நூற்றாண்டு அரசியல்வாதிகளாச்சே.. இவர்களிடம் போய் காமராஜரையும், கக்கனையும் எதிர்பார்க்க முடியுமா?

அவங்களுக்குத்தான் அதெல்லாம்
சாதாரண மக்கள் நல்ல தரமான மருத்துவமனைகளுக்கும், மருத்துவ வசதிகளுக்கும் "லோலோ"வென்றுதான் அலைய வேண்டியுள்ளது இன்றும். ஆனால் இந்த அரசியல்வாதிகளுக்காகவே இருக்கிறது "லோ" ரக மருத்துவமனைகள். மாதக் கணக்கில் கூட படுத்துக் கிடந்து விட்டு வரலாம். செலவெல்லாம் அரசாங்கத்துடையது.. அதாவது பாவப்பட்ட மக்களுடையது. கேட்க நாதியிருக்கா.. கேட்டா தேச துரோகியாகி விடுவோம்!

இது பத்தாது விஜய்.. இன்னும் வேண்டும்
மக்களுடைய மனங்களை இன்னும் அரித்துக் கொண்டிருக்கும் விஷயத்தைத்தான், வேதனையைத்தான் அட்லீ படம் மூலமாக பேசியிருக்கிறார் விஜய். இது பத்தாது விஜய். இன்னும் வெளுத்தெடுக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கு. இந்த வசனங்களைப் பார்த்து கோபப்படுகிறார்கள் அரசியல்வாதிகள் என்றால் அது அவர்களைச் சுடுகிறது என்றுதானே அர்த்தம். ஸோ, விஜய் போன்றவர்கள் இன்னும் சூடாகப் பேச வேண்டும், நிறையப் பேச வேண்டும்.












Click it and Unblock the Notifications