2011 "எக்சிட் போல்"கள் என்ன சொல்லுச்சு.. உண்மையில் என்ன நடந்துச்சு..?
சென்னை: கருத்துக் கணிப்புகளும், எக்சிட் போல் எனப்படும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் எப்போதுமே சுவாரஸ்யமானவை. முடிவு தெரியும் வரை வெறும் வாயை மெல்லாமல் இருக்க இந்த "அவல்" மக்களுக்கும் தேவைப்படத்தான் செய்கிறது.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் கணிப்புகளையும் மீறி அதிமுக ஆட்சியைப் பிடித்தது. கிட்டத்தட்ட பெரும்பாலான கணிப்புகள் பொய்த்தன. குறிப்பாக எக்சிட் போல்களில் வந்த முடிவுகளும் கூட உண்மையான முடிவுகளுக்கு முரணாகவே இருந்தது.
தற்போதும் கூட பல நிறுவனங்கள், வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளையும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய எக்சிட் போல்களையும் நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளனர். ஆனால் நாளை அதிகாரப்பூர்வமாக நிஜமான முடிவுகளே வரப் போகின்றன.
இந்த நிலையில் கடந்த தேர்தலின்போது தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக வெளியான முடிவுகள் எப்படி இருந்தன, நிஜமான முடிவுகள் எப்படி இருந்தன என்பதை திரும்பிப் பார்ப்போம்.

கிட்டத்தட்ட துல்லியமாக சொன்ன சி வோட்டர்
2011 சட்டசபைத் தேர்தலின்போது வெளியான எக்சிட் போல்களிலேயே நியூஸ் எக்ஸ் - சி வோட்டர் வெளியிட்ட எக்சிட் போல்தான் கிட்டத்தட்ட துல்லியமாக இருந்தது.

சி வோட்டர் சொன்னது என்ன?
சி வோட்டர் அதிமுக 176 இடங்களைப் பெறும் என கணித்திருந்தது. திமுக கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்கள் கிடைக்கும் எனக் கூறியிருந்தது. அதிமுக அத்தேர்தலில் 150 இடங்களில் வென்றது. கூட்டணிக்கு மொத்தமாக 203 இடங்கள் கிடைத்தன.

ஹெட்லைன்ஸ் டுடே - ஓஆர்ஜி
ஹெட்லைன்ஸ் டுடேவுக்காக ஓஆர்ஜி நடத்திய எக்சிட் போல் அதிமுகவுக்கு 105 முதல் 120 இடங்கள் கிடைக்கும் எனக் கணித்திருந்தது. திமுகவுக்கு அது 115 முதல் 130 இடம் கிடைக்கும் எனக் கூறியிருந்தது.

சிஎன்என்-ஐபிஎன்- திவீக்
இவை நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 120 முதல் 132 வரையும், திமுகவுக்கு 102 முதல் 114 வரையும் கிடைக்கலாம் எனக் கணித்திருந்தது.

ஆசியாநெட் - சி போர்ஸ்
இந்த எக்சிட் போலில் திமுகவுக்கு 117 இடங்களும், அதிமுகவுக்கு 132 இடங்களும் கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்டார் நியூஸ்
ஸ்டார் நியூஸ் நடத்திய எக்சிட் போலில் திமுகவுக்கு 124 இடங்கள் கிடைக்கும் எனவும், அதிமுகவுக்கு 110 இடங்கள் கிடைக்கும் எனவும், அதாவது திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியிருந்தது ஆனால் இந்தத் தேர்தலில் திமுகவால் பிரதான எதிர்க்கட்சியாகக் கூட உருவெடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் ஆய்வு மையம் - லயோலா
லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மையம் தேர்தலுக்கு முன்பு நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 105 இடங்கள் கிடைக்கும் என்றும், திமுகவுக்கு 70 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

நிஜத்தில் நடந்தது
2011 தேர்தலில் நிஜத்தில் நடந்தது என்னவென்றால் அதிமுக கூட்டணி 203 இடங்களில் வென்றது. இதில் அதிமுக 150, தேமுதிக 29 இடங்களை வென்றன. திமுக கூட்டணி 31 இடங்களில் வென்றது. அதில் திமுகவின் பங்கு 23, காங்கிரஸுக்கு 5 சீட் மட்டுமே கிடைத்தது.

2016 கணிப்புகள் கூறுவது என்ன?
2016 சட்டசபைத் தேர்தலில் பல்வேறு கருத்துக் கணிப்புகளும், எக்சிட் போல்களும் வெளியாகியுள்ளன. இதில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற அனைத்துமே திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணித்துள்ளன. சிவோட்டர் மட்டுமே அதிமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் என உறுதிபடத் தெரிவித்துளளது. திமுக ஆட்சியைப் பிடிக்கும் என நான்கு எக்சிட் போல்கள் தெரிவித்துள்ளன. ஒரு எக்சிட் போல் அதிமுகவை ஆதரித்துள்ளது. தந்தி டிவி நடத்திய எக்சிட் போலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.
இதோ நாளை முடிவு தெரியப் போகிறது... இந்நேரம் லீடிங் நிலவரம் வெளியாகி யார் கைக்கு அடுத்த ஆட்சி போகப் போகிறது என்பது ஓரளவு தெரிய வந்திருக்கும். அதுவரைக்கும் பொறுத்திருப்போம்.












Click it and Unblock the Notifications