வேட்பு மனு வாபஸ் முடியும் வரை கூட்டணி பேசலாம் என்ற விஜயகாந்த்.. போட்டுத் தாக்கும் சந்திரகுமார்
சென்னை: தேமுதிகவின் மனதில் அதாவது விஜயகாந்த்தின் மனதில் கூட்டணி குறித்த நிரந்தரமான -தெளிவான திட்டம் எதுவும் இல்லை என்பதையே இன்று வி.சி.சந்திரகுமார் கூறிய வார்த்தை விளக்குவதாக உள்ளது.
தனது ஆதரவாளர்களோடு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.சந்திரகுமார் கூட்டணி தொடர்பாக விஜயகாந்துக்கும், தனக்கும் இடையே நடந்த உரையாடல்களையும் அம்பலப்படுத்தியுள்ளார். அதில் அவர் சொன்ன ஒரு வார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

"என்னிடம் கடைசியாக பேசியபோதுகூட, வேட்புமனுவை வாபஸ் பெறும் வரை கூட்டணி பேச முடியும், எனவே அமைதியாக இருங்கள் என்று விஜயகாந்த், கூறியதால் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர உதவும் வகையில் விஜயகாந்த் முடிவு அமைந்து விட்டது. தொண்டர்கள் மனப்பாங்கை மதித்துதான் தலைவன் முடிவை எடுத்திருக்க வேண்டும். திமுகவோடு தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது என்று பத்திரிகையில் செய்தி வந்தபோதுகூட விஜயகாந்த் மறுப்பு தெரிவிக்கவில்லை. எனவே நாங்கள் நம்பிக்கையோடு இருந்து வந்தோம். மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைய என்ன காரணம் என்று எங்களுக்கு இன்னும் விளங்கவில்லை" என்று கூறியுள்ளார் சந்திரகுமார்.
இதில் வேட்பு மனு தாக்கல் முடியும் வரை கூட பேச முடியும் என்று விஜயகாந்த் கூறியிருப்பதாக அவர் கூறியுள்ளதுதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. இது உண்மையானால் விஜயகாந்த் மனதில் நிரந்தரமான, தெளிவான முடிவு எதுவும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
அப்படியானால், தற்போது மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக வைத்திருக்கும் உறவு நிரந்தரம் இல்லையா?
மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்துள்ள அதேசமயம், வேறு பக்கமும் தொடர்ந்து தேமுதிக பேச தயாராக உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
சந்திரகுமார் கூறியது தவறு என்றால் மக்கள் நலக் கூட்டணியால் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட விஜயகாந்த்தான் விளக்கம் தர வேண்டும்..!












Click it and Unblock the Notifications