விஜயகாந்துக்கு இப்போது அவசரமாக தேவைப்படுவது அரசியலா அல்லது அமைதியான ஓய்வா?
சென்னை: உண்மையிலேயே தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நலனை நினைத்தால் கவலையாக இருக்கிறது. ஆனால் இந்தக் கவலை அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு இல்லையோ என்ற சந்தேகமும் வருகிறது. அவருக்கு இப்போது முக்கியத் தேவை அரசியலா அல்லது அமைதியான ஓய்வா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சில ஆண்டுகளாகவே விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லை. முன்பு போல அவர் இல்லை. குறிப்பாக சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், அதிமுகவினருக்கு எதிராகவும் தைரியமாக எழுந்து நின்று முழக்கமிட்ட விஜயகாந்த் இப்போது இல்லை.
அவரது உடலில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அதை பொதுவில் வைத்து ஆய்வு செய்வதும் அவசியமற்றது, தேவையற்றது, தவறும் கூட. இருப்பினும் பொது வாழ்க்கையில் ஈடுபடடுள்ள ஒரு தலைவரின், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு தலைவரின், ஒரு முக்கியக் கூட்டணியின் தலைவரின் செயல்பாடுகள் நிச்சயம் விவாதத்துக்குட்பட்டவை என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
அந்த வகையில் விஜயகாந்த்தின் சமீபத்திய செயல்பாடுகள், அவர் நடந்து கொள்ளும் முறை, பேச்சு உள்ளிட்டவை மிகப் பெரிய கேலிக்கூத்தாக உள்ளன.
ஒருங்கிணைப்பு இல்லை
விஜயகாந்த்தின் பேச்சு, செயலில் ஒருங்கிணைப்பு இல்லை. திடீர் திடீரென கோபப்படுகிறார். தனக்கு உதவியாக வருகிறவர்களையே அடிக்கிறார். நாக்கைத் துருத்தி திட்டுகிறார். திடீரென சிரிக்கிறார், அழுகிறார். பார்க்கவே பரிதாபமாக உள்ளது.
எம்.ஜி.ஆரை விமர்சிக்கிறார்
இவரை எல்லோரும் கருப்பு எம்ஜிஆர் என்கிறார்கள். ஆனால் இவரோ பேசாமலேயே ஆட்சி புரிந்த ஒருவர் இருக்கார், யார் தெரியுமா. அவர்தான் எம்ஜிஆர் என்று கூறி நக்கலாக சிரிக்கிறார்.
துப்பல் - மிரட்டல் - உருட்டல்
பத்திரிகையாளர்களைப் பார்த்து துப்பினார், தனது கட்சித் தொண்டர்களையே திட்டுகிறார், பாடிகார்டை அடிக்கிறார், கூடவே விசிறியும் விட்டுச் சிரிக்கிறார்.
தொகுதி பெயரையே தவறாக உச்சரிக்கிறார்
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த அவர் அங்கு தான் போட்டியிடும் தொகுதி உடுமலைப்பேட்டை என்று கூறி அதிர வைத்தார்.
நடிக்கிற வாட்ச்
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், கட்டியிருக்கிற வாட்ச் என சொல்வதற்கு பதிலாக நடிக்கிற வாட்சை பார்த்துக்கொண்டே பேசுவதால்தான் பேசமுடியவில்லை என கூறியதை கேட்டு அவரது கட்சியினரும், பொதுமக்களும் குழப்பமடைந்தனர்.
கட்சியினரே கேட்பதில்லை
தொடர்ந்து பேசிய விஜயகாந்த், அடுத்த பிரச்சாரத்திற்கு செல்லவுள்ள இடத்தைக் கூட வெறுப்புடன் கூறியதுடன், தான் கேட்டால் தன் கட்சிக்காரர்களே பதில் சொல்லாமல் செல்கிறார்கள் என தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
பாடிகார்டு போட்ட போடு
இந்த நிலையில் நேற்று கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது விஜயகாந்த்துக்கு சால்வை போட வந்த ஒருவரை விஜயகாந்த்தின் பாடிகார்டு மேடையிலேயே சரமாரியாக அடித்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இப்படி ஒரு அரசியல் தேவையா?
இப்படிப்பட்ட ஒரு தலைவரை எப்படி மக்கள் முதல்வராக, தலைவராக ஏற்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த்தை குழந்தைக்குச் சமம் என்று கூறி மக்களுக்கு பிரெய்ன் வாஷ் செய்யும் வேலையிலும் அவரைச் சுற்றியுள்ள சில தலைவர்கள் ஈடுபட்டிருப்பதுதான் உச்சகட்ட அறுவெறுப்பாகும்.
தேவை ஓய்வு
உண்மையில் விஜயகாந்த்துக்கு இப்போது தேவை அருமையான ஓய்வுதான். நன்கு ஓய்வெடுக்க அவரை குடும்பத்தினரும், சுற்றியுள்ள தலைவர்களும் அனுமதிக்க வேண்டும்.