மக்கள் மனதை கொள்ளை கொள்ள கமல் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?
மக்கள் மனதை கொள்ளை கொள்ள கமல் செய்ய வேண்டியது ஆக்கப்பூர்வமான பணிகளே ஆகும்.
Recommended Video
ராமேஸ்வரம்: கலாம் வீட்டிலிருந்து கமல்ஹாசன் தொடங்கிய அரசியல் பயணம் வெற்றி பயணமாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்றால் அவர் செய்ய வேண்டியவை என்னென்ன?
கமல் மக்களின் நலனுக்காக அரசியலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகமே மெச்சும் அளவுக்கு கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் மக்கள் மனதில் நிலைத்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்.
ஆக்கப்பூர்வமான வகையில் செய்தால் மட்டுமே அவர் அரசியலில் நிலைத்திருக்க முடியும். மற்றபடி சராசரி அரசியல்வாதியை போல் அவர் இருந்தாரேயானால் நிச்சயம் அவரது அரசியல் பயணம் சறுக்கலை ஏற்படுத்தும்.
மக்களுக்கு பிடிக்காது
தற்போது உள்ள அரசியல்வாதிகள் செய்யும் செய்லபாடுகள் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது என்றே சொல்லலாம். மக்கள் பிரதிநிதி என்று கூறி கொண்டு ஆக்கப்பூர்வமான விஷயங்களில் செயல்படாமல் வரட்டு கவுரவத்துக்காகவும் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவும் எல்லாவற்றையும் அரசியல் ஆக்குகின்றனர். இதை மக்கள் விரும்புவதில்லை.
கருப்பு கொடி
மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பதை விட்டுவிட்டு அவர்களுக்காக போராடுகிறேன் என்ற பெயரில் போராட்டம் நடத்துவது, மறியல் செய்வது, கருப்புக் கொடி காட்டுவது உள்ளிட்ட ஸ்டென்ட்டுகளை நடத்தினால் போதுமா. இத்தனை ஆண்டுகளாக இந்த போராட்டங்களால் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதா என்றால் பெரும்பாலான பதில் இல்லை என்பதுதான் ஆகும்.
வெள்ளையனே வெளியேறு
இந்தியாவை ஆண்டு வந்த வெள்ளையர்களை விரட்ட காந்தியடிகள் உள்ளிட்ட தியாகிகள் செய்த போராட்டங்கள் வேறு . தற்போது அரசியல் வாதிகள் செய்யும் போராட்டம் வேறு. இவர்கள் செய்வது முழுக்க முழுக்க மக்களின் மனதை கவர்வதற்கு இவர்கள் போடும் வேஷமே போராட்டம் ஆகும். ஒரு நாளோ அல்லது இரு நாட்களோ போராட்டம் நடத்திவிடுவதோடு சரி, அத்துடன் அடுத்த விஷயத்தை கையில் எடுக்க சென்றுவிடுவார்கள்.
கமல் என்ன செய்ய வேண்டும்
மற்ற அரசியல்வாதிகளை போல் கமல்ஹாசனும் போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம் என்றே காலத்தை ஓட்டினால் நிச்சயம் மக்கள் மனதில் ஒரு இடம் பெற முடியாது. எதுவாகினும், ஸ்டென்ட் அடிப்பதை விட்டு விட்டு அந்த பிரச்சினையை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து அதை செய்ய வேண்டும். போராட்டம் என்றால் வெள்ளையனே வெளியேறு போராட்டம் போல் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர செய்தியாக மட்டுமே மாறிவிடக் கூடாது.
தோல்வி சகஜம்
கமல்ஹாசன் தேர்தல்களில் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ மக்கள் பிரச்சினைகளில் சாதுர்யமாக செயல்பட்டு தீர்வு காணவேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அப்போதுதான் கமல்ஹாசன் தனி நட்சத்திரமாக ஜொலிப்பார். இல்லாவிட்டால் அவரும் பத்தோடு பதினொன்றாகவே இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்களுக்கு தேவை போராட்டம் நடத்துவது அல்ல, சட்டப்பூர்வமாக நாடுவது ஆக்கப்பூர்வமான வேலைகளில் இறங்குவதுதான். தற்போதுள்ள அரசியல்வாதிகள் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காகவே சட்டப்பூர்வமாக அணுகுகின்றனர். மக்கள் பிரச்சினைகளுக்காக அல்ல. ஆண்டவர் இந்த பாணியை பின்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.