தீராத பஞ்சாயத்து! கருணாநிதி அரசாணை.. ரத்து செய்த ஜெயலலிதா.. தமிழ்ப் புத்தாண்டை பந்தாடும் அரசியல்!
சென்னை : தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று 2008ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அரசாணை வெளியிட, அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த அரசாணையை ரத்து செய்து சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று ஜெயலலிதா அரசாணை வெளியிட்டார். இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டு எப்போது என்பது விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.
தமிழ் புத்தாண்டு பல காலமாக சித்திரை 1 (ஏப்ரல் 14)ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை தமிழ்ப் புத்தாண்டு பெரும்பான்மையான தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இன்றுடன் சுபகிருது வருடம் முடிந்து நாளை முதல் சோபகிருது ஆண்டு தொடங்க இருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பல காலமாக சித்திரை மாத முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், தமிழறிஞர்கள் கூற்றுப்படி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் நாளே தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்றும், அதன்படி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் கடந்த 2008ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அரசாணை வெளியிட்டது.
அதன் பின்னர் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தபோது 2011-ல் தை மாதத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று ஜெயலலிதா அரசாணை வெளியிட்டார். அப்போது, தமிழ்ப் புத்தாண்டு, தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்படியே, அதிமுக ஆட்சிக்காலம் முழுவதும் கடந்த 2021ஆம் ஆண்டு வரை ஏப்ரல் 14ஆம் தேதி, அதாவது சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. 10 ஆண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக சர்ச்சை எழுந்து வருகிறது. கடந்த 2022, 2023 என இரண்டு ஆண்டுகளாக தை முதல் நாளே அரசு சார்பில் தமிழ்ப் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தை முதல் நாள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிக்கும்போதே தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார். தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக திமுக - அதிமுக இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வரும் நிலையில், பெரும்பான்மை மக்கள், சித்திரை ஒன்றாம் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நித்திரையில் இருக்கும் தமிழா..! சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு" என்ற பாரதிதாசன் பாடலை, தை தான் புத்தாண்டாக வேண்டும் எனக் கூறும் தரப்பினர் தங்களுக்கு சாதகமான முழக்கமாக ஆண்டுதோறும் முன்வைத்து வருகின்றனர். அதேசமயம், எதிர் தரப்பினர், பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதம் தொடங்குவதே தமிழ் ஆண்டு என்கிற வாதங்களை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications