ராம்குமார் பிரேதப் பரிசோதனை.. எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் நடத்த 3வது நீதிபதி உத்தரவு
சென்னை: ராம்குமார் பிரேதப் பரிசோதனையை அரசு மருத்துவர்களே நடத்தலாம். அதேசமயம், டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக மருத்துவரும் உடன் இருக்க வேண்டும் என்று 3வது நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
தங்களது தரப்பு மருத்துவர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்ற ராம்குமாரின் தந்தையின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார். தற்போது 3 நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்பை அளித்துள்ளதால் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் அப்பீல் செய்ய ராம்குமாரின் தந்தை முடிவெடுத்துள்ளார்.

ராம்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதால் தனியார் மருத்துவர் ஒருவர் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக இரண்டு நீதிபதிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வழக்கு 3வது நீதிபதி கிருபாகரனிடம் மாற்றப்பட்டது.
இதையடுத்து இன்று காலை இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ராம்குமாரின் தந்தை சார்பில் வழக்கறிஞர் சங்கர சுப்பு ஆஜராகி தனது தரப்பின் நியாயத்தையும் ராம்குமாரின் மரணத்தின் மீதான சந்தேகத்தையும் எடுத்து வைத்தார். அதே போன்று தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி வாதாடினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாணையை கேட்ட நீதிபதி கிருபாகரன் தீர்ப்பை இன்று மாலை அறிவிப்பதாக ஒத்தி வைத்தார்.
இன்று மாலை நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார். அதன்படி அரசு டாக்டர்களே பிரேதப் பரிசோதனையை நடத்தலாம் என உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், அத்துடன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டரும் உடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
செப்டம்பர் 27ம் தேதிக்குள் ராம்குமாரின் பிரேதப் பரிசோதனையை நடத்தி முடிக்கவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். தனியார் மருத்துவரை நியமிக்க வேண்டும் என்ற ராம்குமாரின் தந்தையின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.
3 நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்பை அளித்துள்ளதால் அப்பீல் செய்ய ராம்குமார் தரப்பு முடிவு செய்துள்ளது.
முன்னதாக குலவாடி ரமேஷ் மற்றும் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்இந்த வழக்கை விசாரித்தபோது ராம்குமார் தரப்பு டாக்டர் உடன் இருக்கலாம் என்று நீதிபதி குலுவாடி ரமேஷ் தீர்ப்பளித்தார். ஆனால் நீதிபதி வைத்தியநாதனோ அரசு மருத்துவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்தே 3வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவரோ எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் முன்னிலையில் நடத்தலாம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications