பரபரக்கும் அதிமுக.. கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு எங்கே.. யாருக்கு ஆதரவு??
அதிமுகவில் பரபரப்பு நிலவி வரும் சூழலில் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகிய 3 எம்எல்ஏகள் யார் பக்கம் உள்ளனர் என்ற எழுந்துள்ளது.
சென்னை: அதிமுகவில் பரபரப்பு நிலவி வரும் வேலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மூன்று எம்எல்ஏக்களின் நிலை என்ன? அவர்கள் யார் பக்கம் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அதிமுக அணிகள், நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று ஒன்றிணைந்தன. இதனையடுத்து, பொதுக் குழு கூடி சசிகலா நீக்கப்படுவார் என்று வைத்திலிங்கம் எம்பி தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வருக்கு எதிராகக் கடிதங்களை வழங்கியுள்ளனர்.
மூவரும் எங்கே?
ஒரே களேபரத்தில் இருக்கும் அதிமுகவில், முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் தலைவரும் நடிகருமான கருணாஸ், மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
யார் பக்கம்?
இதனால் அவர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் மூவரைப் பொறுத்தவரை தினகரன் சாய்வாகவே தொடர்ந்து பேசி வருகின்றனர். மேலும் கடந்த 14ம் தேதி தினகரன் கலந்து கொண்ட மேலூர் பொதுக் கூட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதால், இவர்கள் மூவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சாய்ந்து விட்டார்களோ என்ற சலசலப்பு ஏற்பட்டது.
ஆதரவு கடிதம்
ஆனால், உடனடியாக கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகிய 3 பேரும் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை தினகரனுக்கு அனுப்பினார்கள். அதில், அதிமுகவில் சோதனை ஏற்பட்டுள்ள சூழலில் தாங்கள் எடுத்துவரும் துணிச்சல் மிகு நடவடிக்கையைப் பாராட்டுகிறோம் என்றும், அதிமுகவின் அணிகளை ஒன்று சேர்க்க விரும்பும் தங்களின் முயற்சிக்கு என்றும் எங்களின் ஆதரவு உண்டு என்றும் கூறினார்கள்.
Recommended Video
ஆளுநர் மாளிகைக்கு ஏன் செல்லவில்லை
இந்நிலையில், இரு அணிகள் இணைப்பிற்குப் பின்னர் தமிழகத்தில் நடக்கும் பரபரப்பில் இவர்கள் மூவரும் எங்கே இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. மேலும், தினகரனுக்குச் சார்பாக பேசி வந்த இவர்கள் இன்று ஆளுநரைச் சந்தித்த 19 எம்எல்ஏக்களுடன் ஏன் செல்லவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பேரமா?
அவர்கள் மூவரும் யார் பக்கம் இப்போது இருக்கிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களிடம் தினகரன் மற்றும் எதிர் அணியினர் பேரம் நடத்தி வரலாம். அதனால்தான் அமைதியாக இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது தற்போது எழுந்துள்ளது.