எங்கே "டுவிட்டர்" கமல்? - நெட்டிசன்கள் கலாட்டா
எங்கே கமல் என்ற கேள்வி தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் எங்கே கமல் என்ற கேள்வியை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
நடிகர் கமலஹாசன் கடந்த ஒரு வருடமாக டுவிட்டர்களில் அரசு மீதான அதிருப்தியை பதிவு செய்து அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
2015ம் ஆண்டு இறுதியில் சென்னை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட கமலஹாசன் தனது ஆதங்கத்தை டுவிட்டரில் கொட்ட ஆரம்பித்தார்.
அரசுக்கு எதிரான அதிருப்திகள்
முதலில் தனிப்பட்ட முறையில் அதிருப்திகளை பதிவு செய்ய ஆரம்பித்த அவர், ஒரு கட்டத்தில் மாநில அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். அதனைத்தொடர்ந்து மத்திய அரசையும் அவர் விமர்சித்தார்.
அரசியலுக்கு வருவேன் என அறிவிப்பு
ஜல்லிக்கட்டு, வரதா புயல், நீட் தேர்வு, அனிதா மரணம், லஞ்சம், ஊழல் என அனைத்தையும் டுவிட்டர் வாயிலாகவே கிழித்துக்கொண்டிருந்த கமல் விரைவில் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார்.
விஷாலை இறக்க நினைத்து
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிட கமல் மறைமுகமாக ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட விஷாலின் வரவு வேட்பு மனுத்தாக்கல் நிராகரிப்பிலே தகர்ந்து போனது. இதில் விஷாலை விட கமலஹாசன் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஒரு டிவீட்டும் இல்லையே
எப்போதும் அரசியல் ரீதியாகவும், கட்சி தொடங்கப்போவதற்கான ஆயத்தமாவது போலவும் டுவிட்டுகளை பதிவிடும் கமல் கடந்த 21ம் தேதி விஸ்வரூபம் 2 பட வேளை தொடர்பான தகவலை வெளியிட்டார். இன்று அரசியல் மாற்றத்தின் அடிப்படையாக கருதப்படும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்தும் அவர் இதுவரை வாய்திறக்கவே இல்லை.
இதனால் நெட்டிசன்கள் எங்கே டுவிட்டர் கமல் என்று கேட்டு அதனை வைரலாக்கி வருகின்றனர்.