ஏம்ப்பா, இங்கே ஒரு மலை இருந்ததே.. அது எங்கே?... அதிகாரிகளுக்கு "ஜெர்க்" கொடுத்த சகாயம்!!
மதுரை: மதுரையில் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு மலையே காணாமல் போனது எப்படி என்று கேட்டு அதிகாரிகளை திணறடித்துள்ளார்.
சகாயம் விசாரணை நாளுக்கு நாள் அதிகாரிகளை அயரடித்து வருகிறது. அவர் எப்படி கேள்வி கேட்பார் என்றே யூகிக்க முடியாத அளவுக்கு அதிகாரிகளை தனது விசாரணையாலும், கேள்விகளாலும் குடைந்தெடுத்து வருகிறார்.

அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நேரடியாக பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் விழிக்கிறார்கள், வியர்த்து வழிகிறார்களாம். இந்த நிலையில் தற்போது 5வது கட்ட விசாணையைத் தொடங்கியுள்ள சகாயம் இன்றும் அதிகாரிகளை கேள்விக்கனைகளால் நிலை குலைய வைத்தார்.
5வது கட்ட விசாரணையின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மேலூர் தாலுகா கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
கீழவளவு - கீழையூர் பகுதிகளுக்கு இடைப்பட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்தற்கு சுமார் 66 அடி உயரத்திற்கு வில் ஊத்துமலை என்ற மலை இருந்தது. அந்த மலை 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.
ஆனால் அந்த மலையை தற்போது வெறும் மடுவாக்கி விட்டார்கள். மடு கூட கிடையாது. தரைமட்டமாக கிடக்கிறது அந்த பெரிய மலை. அந்த அளவுக்கு சுரண்டி எடுத்து விட்டனர். ஒரு சில பகுதிகளில் 40 அடிக்கும் கீழே கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனை டாமின் அதாவது தமிழ்நாடு கனிமவள நிறுவனம், ஒப்பந்தக்காரர்களிடம் கிரானைட் குவாரிகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து டாமின் அதிகாரிகளை நேரடியாக அழைத்த சகாயம், அவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த மலை எந்த ஆண்டு ஒப்பந்தக்காரர்களுக்கு அளிக்கப்பட்டது. அப்போது இருந்த பரப்பளவு என்ன. தற்போது இருக்கும் பரப்பளவு என்ன. இந்த மலையில் எவ்வளவு வெட்டி எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் டாமின் நிறுவனத்திற்கு எந்த அளவுக்கு லாபம் கிடைத்தது என்று வரைபடத்தை வைத்துக்கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டார். பல கேள்விகளுக்கு வழக்கம் போல மழுப்பல் பதிலே வந்ததாம்.
அந்த மலையில் வசித்த விலங்குகளுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் உள்ள அளவுகளில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக அறிகிறேன். எனவே இதுபற்றிய முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டாமின் அதிகாரிகளுக்கு சகாயம் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications