ஈவ்டீசிங் செய்தால் 'வெள்ளை சுடிதார்' படை அள்ளிக்கிட்டு போயிரும் ஜாக்கிரதை!
சென்னையில் பேருந்துகளில் பெண்களிடம் பாலியல் தொந்தரவு, தவறாக நடந்து கொள்வது, ஈவ் டீசிங் போன்ற தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்தது.
சென்னை கோயம்பேடு பேருந்தில் கடந்த வெள்ளிக்கிழமை, இளம்பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் போலீஸ்க்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் மோதல் உருவாகி 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து பேருந்துகளில் பாலியல் தொந்தரவு செய்யும் நபர்களை பிடிக்க வெள்ளை சுடிதார் படை என்ற அமைப்பை மாநகர காவல்துறை உருவாக்கியுள்ளது. இதில் வெள்ளை சுடிதார் அணிந்த பெண் காவலர்களை மாநகரக காவல்துறை பணியில் அமர்த்தியுள்ளது.
ரோந்து பணியில் ஈடுபடும் நீலப்படை, மஞ்சள் படை போன்று இவர்கள், வெண்மைப்படை என்று அழைக்கப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் முற்றிலும் பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த வெள்ளை சுடிதார் பெண் காவலர்கள் சென்னை முழுவதும் பேருந்துகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளில் பயணிகளோடு, பயணிகளாக ரகசியமாக இந்த வெண்மை படையினர் பயணம் செய்வார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.