ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளராக களமிறங்குவது மதுசூதனனா? பாலகங்காவா? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு இன்று கூடுகிறது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று கூடவுள்ள அதிமுக ஆட்சி மன்றக் குழுவில் முடிவு எடுக்கப்படும்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் இரு அணிகள் சார்பில் தினகரனும், மதுசூதனனும் போட்டியிட இருந்தனர். அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது.
ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தற்போது ஒருங்கிணைந்த அதிமுகவின் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேமுதிக, பாமக போட்டியில்லை
இதையடுத்து திமுக சார்பில் கடந்த முறை அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மருதுகணேஷே இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேமுதிக, பாமக ஆகியன கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டன. காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன.

சலசலப்பு
அதிமுகவின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஆட்சி மன்றக் குழு கூடியது. இதில் சற்று சலசலப்பு ஏற்பட்டதால் வேட்பாளர் தேர்வு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனு தாக்கல்
இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளர் மதுசூதனன், ஈபிஎஸ் ஆதரவாளர் பாலகங்கா உள்பட 8 பேர் நேற்று விருப்ப மனுவை கட்சி அலுவலகத்தில் அளித்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதிமுக ஆட்சி மன்றக் குழு கூடுகிறது.

வேட்பாளர் யார்?
இதில் வேட்பாளராக ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளரா அல்லது ஈபிஎஸ் ஆதரவு வேட்பாளரா என்பது இன்று தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications