ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? சசி-பன்னீர் கோஷ்டிக்கு சம வாய்ப்பு!
சசிகலா நியமனம் செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்தால் அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் பன்னீர் செல்வம் எடுத்த முடிவு செல்லுபடியாகும்.
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எந்த கோஷ்டிக்கு போகும் என்பதில் கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு பதைபதைப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பன்னீர்செல்வம் பின்னால் திரண்டுள்ளனர். இதனால் கட்சி இரு பிரிவாக பிளவுபட்டுள்ளது.
அதிமுக சட்ட விதிகளின்படி, பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான், தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு சசிகலா தேர்வு செய்யப்படாமல் பொதுக்குழுவை கூட்டி தற்காலிக பொதுச்செயலாளராகத்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

விதிமுறைகளை மீறிய சசிகலா
மேலும், பொதுச்செயலாளராவதற்கு, கட்சியில் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். சசிகலா, கட்சியில் சேர்க்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் பூர்த்தி யாகவில்லை. எனவே, அவர் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி, பன்னீர் செல்வம் அணியினர், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தனர்.

இன்றுக்குள் பதில்
அந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி, சிறையில் உள்ள சசிகலாவுக்கு, தேர்தல் கமிஷன், நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு, சசிகலா பதில் அளிக்காமல், தினகரன் பதில் அனுப்பினார். அதை ஏற்க மறுத்த தேர்தல் கமிஷன், மார்ச், 10க்குள் சசிகலா பதில்அளிக்க வேண்டும் என, கெடு விதித்தது. அதன்படி, இன்று மாலைக்குள், சசிகலா சார்பில் பதில் அளிக்கப்பட உள்ளது.

பன்னீர்பக்கம் பந்து
இவ்விவகாரத்தில், சசிகலா நியமனம் செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்தால், அவரால்,அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதும் செல்லாததாகி விடும். பொதுச்செயலர் இல்லாத நிலையில், அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் பன்னீர் செல்வம் எடுத்த முடிவு செல்லுபடியாகும்.

இரட்டை இலை யாருக்கு
அப்போது, அவர்கள் கட்சிக்கு உரிமை கோருவார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில், தங்கள் வேட்பாளருக்கு,இரட்டை இலை சின்னம் ஒதுக்கும்படி வலியுறுத்துவார்கள் என தெரிகிறது. அதேநேரத்தில், சசிகலா தரப்பினரிடம், ஆட்சி அதிகாரம் உள்ள தால், அவர்களும் இரட்டை இலை சின்னத்தை கோருவார்கள். யாருக்கு சின்னம் ஒதுக்குவது என்ற சர்ச்சை வெடிக்கும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தலில் சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications