ஆர்.கே நகர் யாருக்கு? அடித்துக்கொள்ளும் அதிமுக பங்காளிகள்
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் அதிமுகவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது, எதிர்கட்சிகளின் வியூகத்தை மீறி யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதே இப்போதைய கேள்வியாகும்.
சென்னை: பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரே குடும்பமாக இருந்த அதிமுகவினர் இப்போது மூன்றுபட்டு நிற்கின்றனர். இதில் வெற்றி யாருக்கு என்பதே இப்போது பலரது கேள்வியாகும்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றுபட்ட அதிமுகவில் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற சபதத்துடன் ஆள் ஆளுக்கு கூட்டம் போட்டு பேசிக்கொண்டுள்ளனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வெற்றி சசிகலா அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி, தீபா ஆகிய மூவருக்குமே முக்கியம் என்பதால் வெற்றிக்கான வியூகம் பற்றி இப்போதே பேச ஆரம்பித்துள்ளனர்.

களைகட்டும் போஸ்டர்கள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஓபிஎஸ் அணி வைத்துள்ள போஸ்டர் ஒருபக்கம், சசிகலாவின் தியாக போஸ்டர் மறுபக்கம், தீபாவின் வாரிசு போஸ்டர் இன்னொரு பக்கம் என மூன்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

யாருக்கு முக்கியம்
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் யாருக்கு முக்கியமோ இல்லையோ, ஆளும் அதிமுகவுக்கு முக்கியமானது. ஜெயலலிதாவிற்குப் பின்னர் சசிகலா தலைமையில் இந்த அரசு இயங்குவதை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. அதனை தை ஆளும் அதிமுக உடைக்க வேண்டிய அவசியமாகிறது.

உள்ளுக்குள் உதறல்
இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே சூடாகி விட்டார் டிடிவி தினகரன். ஜெயலலிதாவும் இல்லை, பொதுச்செயலாளர் சசிகலாவும் இல்லை, முதன்முறையாக இடைத்தேர்தலை டிடிவி தினகரன் தலைமையில் சந்திக்க உள்ளது. எங்களுக்கு எதிரி திமுகதான் என்று தினகரனின் வாய் சொன்னாலும் உள்ளுக்குள் பன்னீர் செல்வத்தின் அணியை நினைத்து உதறல் எடுக்கத்தான் செய்கிறது.

மானப்பிரச்சினை
ஆர்.கே.நகரில் ஜெயிப்பது நமக்கு மானப் பிரச்னை. அங்கே தோற்றால் அதைவிட அசிங்கம் வேற எதுவும் இருக்காது. எனவே எல்லாரும் ஒரே டார்க்கெட்டா ஆர் கே நகர்ல ஜெயிக்கிறது பத்திதான் பேசனும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். வேட்பாளர் யாராக இருந்தாலும் ஜெயிக்க வைக்கணும் என்று பேசியிருக்கிறாராம்.

ஜெயித்தே ஆகணும்
அதே நேரத்தில் ஓபிஎஸ் அணியோ ஆர்.கே.நகரில் நாம் நிறுத்தும் வேட்பாளர் அவங்களைவிட ஒரு ஓட்டாவது அதிகம் வாங்கணும். நாம தனியாக நின்னு அவங்களைவிட அதிக வாக்குகள் வாங்கணும். அப்போதான் சசிகலாவை விட மக்கள் ஆதரவு நமக்குத்தான் இருக்கு என்பதை ஒட்டுமொத்த கட்சிக்காரங்களுக்கும் உணர்த்த முடியும் என்று பேசியுள்ளனர்.

தீபா கணக்கு
ஆர் கே நகரில் போட்டியிடப் போவதாக முதல் ஆளாக அறிவித்துள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. தனக்கு சசிகலா அணி, திமுக தவிர யார் ஆதரவு கொடுத்தாலும் ஏற்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். அரசியலில் பால பாடம் படிக்காத தீபா தனது வீட்டிற்கு வரும் சில நூறு தொண்டர்களை நம்பி ஆர்.கே. நகரில் களமிறங்குகிறார். ஆனால் இடைத்தேர்தலில் அவர் எத்தனை ஓட்டு வாங்கப்போகிறார் என்பதை வைத்தே அவரது அடுத்த அரசியல் பயணம் இருக்கும் என்பதால் தீபாவிற்கு இது மிக முக்கியமான தேர்தல்.

ஆர்.கே. நகர் யாருக்கு
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அதிக பலத்தோடு ஒற்றுமையுடன் இருந்து ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல், பொதுத்தேர்தலை அதிமுகவினர் சந்தித்தனர். இப்போது அதிமுகவினர் மூன்றாக பிளவு பட்டுள்ளனர். அதிமுக பங்காளிகள் தங்களின் பலத்தை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருப்பதால் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா ஆகிய மூவருக்குமே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முக்கியமானதாகிறது. சசிகலா ஆதரவு பெற்ற வேட்பாளருக்கா? ஓபிஎஸ் அணிக்கா? ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கா? ஆர்.கே. நகர் யாருக்கு என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications