ப.சிதம்பரம் விழாவில் அதிமுக அமைச்சர் தாமோதரன் கலந்து கொண்டது ஏன்?... அப்படீன்னா??

இது தேர்தல் காலம் என்பதால் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு காது மூக்கு வைத்துப் பார்த்து வருகிறார்கள்.
பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, பட்டை உள்ளிட்ட தொழில்களுக்கான நறுமணப் பூங்கா, மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் முயற்சியால், கடந்த திமுக ஆட்சியில் 70 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது.
இதை விரைவில் திறந்து வைக்கப் போவதாக ப.சிதம்பரத்தின் எதிர்ப்பாளரான சுதர்சன நாச்சியப்பன் கூறியிருந்தார். ஆனால் அதற்குள் முந்திக் கொண்ட ப.சிதம்பரம், தானே வந்து அதைத் திறந்து வைத்தார். இதனால் சுதர்சன நாச்சியப்பன் அப்செட். அன்றைய தினம் அவர் கோவை போய் விட்டார்.
இந்த விழாவில்தான் கண் கொள்ளாக் காட்சியாக ப.சிதம்பரத்துடன், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன், அதிமுக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு சரிக்குச் சமமாக சந்தோஷமாக அமர்ந்திருந்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன்தான் தாமோதரன் இந்த விழாவுக்கு வந்தாராம். அவருடன் சேர்ந்து போங்கள் என்று சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட அக்கம் பக்கத்து மாவட்ட மாவட்டச் செயலாளர்களுக்கும் ஜெயலலிதாவே உத்தரவிட்டிருந்தாராம். இதனால் அத்தனை பேரும் ஒட்டுக்காக கிளம்பி வந்திருந்தனராம்.
ப.சிதம்பரமும் அமைச்சர் உள்ளிட்ட அதிமுகவினருடன் முக மலர்ச்சியுடன் பேசினார். சிறப்பாக வரவேற்றார். வழியனுப்பியும் வைத்தார்.
இதை வைத்துச் சிலர், அதிமுக, காங்கிரஸ் இடையே ஏதோ நடக்க ஆரம்பித்திருப்பதாக பேச ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ப.சிதம்பரம் மூலம் காங்கிரஸ் மேலிடத்தை அணுக அதிமுக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பேசப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியுடன் மிக நெருக்கமாக இருந்தவர் ப.சிதம்பரம். ஆனால் 2ஜ வழக்கு விவகாரத்தில் ப.சிதம்பரம் மீது கடும் அதிருப்தியடைந்துள்ளார் கருணாநிதி. இதனால்தான் ப.சிதம்பரத்தின் தாயார் மறைந்தபோது கூட அஞ்சலி செலுத்த கருணாநிதியோ, திமுகவினரோ யாருமே போகவில்லை.
இந்த நிலையில்தான் அதிமுகவினர், ப.சிதம்பரம் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு ஒருமுறை, ப.சிதம்பரம் தனிக்கட்சி நடத்தி வந்தபோது திருச்சி அருகே அவரது கார் மீது அதிமுகவினர் சரமாரியாக தாக்குதல் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
அரசியலாச்சே.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. இதை சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பேட்டியின்போது கூறியதாக நினைவு...












Click it and Unblock the Notifications