லண்டன் டாக்டர்கள் சிகிச்சைக்கு பிறகும் எய்ம்ஸ் டாக்டர்கள் வருகை ஏன்? பின்னணி காரணம் இதுதான்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க திடீரென எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் வந்திருப்பதன் பின்னணியில் பரபரப்பு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்கள் ஓடிவிட்டன. ஆரம்பத்தில், ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வு என்றுதான் மருத்துவமனை நிர்வாகம் சொல்லிக்கொண்டிருந்தது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகமே இறங்கிவந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுப் பிரச்னை என்று சொல்லும் அளவுக்கு அதன் அறிக்கைகள் மாறி உள்ளன. லண்டனிலிருந்து, டாக்டர் ரிச்சர்ட் பியெல் வர வழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், திடீரென இப்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மூன்று சிறப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் டாக்டர் கில்நானி, நுரையீரல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர். டாக்டர் அஞ்சன் டிரிக்கா, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர். இவர்களுடன் இதயநோய் சிறப்பு மருத்துவர் நிதிஷ்நாயக்கும் வந்துள்ளார்.
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் மற்றும் அவரது மற்றொரு சக லண்டன் டாக்டரின் சிகிச்சையைத்தாண்டி, தற்போது எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைக்க வேண்டிய நோக்கம் முதல்வரின் உடல்நிலை மட்டுமல்ல, சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மனுவும்தான் என்கிறார்கள்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்தார். மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டிராஃபிக் ராமசாமி, கடந்த 3-ம் தேதி நீதிபதிகளிடம் முறையிட்டார். அப்போது, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் சில கருத்துக்களைத் தெரிவித்தனர். அதில், முதலமைச்சரின் உடல்நிலை பற்றி வெளிப்படையாகப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை, அரசாங்கத்துக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டனர்.
ராமசாமியின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் ஆனாலும்கூட, இந்த விவகாரத்தை யாராவது உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துப்போக வாய்ப்புள்ளது. அப்படிப் போகும்போது, உச்ச நீதிமன்றம், திடீரென, ஒரு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, முதல்வர் உடல்நிலையைப் பரிசோதித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கலாம். அப்படி நடந்தால், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களைத்தான் நாடவேண்டும். இதில் இருந்து தப்புவதற்காகவே, அப்போலோ மருத்துவமனையும், அரசாங்கமும் முன்கூட்டியே எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.
ஏனெனில் இப்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்களுக்கு பழக்கமானவர்களை மருத்துவர்களாக அமர்த்திக்கொள்ள ஜெயலலிதா தரப்புக்கு வாய்ப்பு உள்ளது. உச்சநீதிமன்றமே ஒரு குழுவை அமைத்தால், அந்த டாக்டர்கள் மூலம், ரகசியங்கள் அம்பலமாகும் வாய்ப்புள்ளது. எனவே, மதுல்வர் உடல் நிலை குறித்த ரகசியங்களை அப்படியே பாதுகாத்து, அப்பல்லோ அறிக்கை மூலம் மட்டுமே மக்களிடம் தொடர்புகொள்ள ஜெயலலிதா தரப்பு முடிவெடுத்து எய்ம்ஸ் மருத்துவர்களை முன்கூட்டியே வரவழைத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications