செய்வீர்களாவுக்கு பதில் 'செஞ்சோம், செஞ்சோம்'னு சொல்ல வேண்டியது தானே: குஷ்பு
சென்னை: ஜெயலலிதா செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேட்பதற்கு பதில் செய்தோம் செய்தோம் என்று கூறி வாக்கு கேட்க வேண்டியது தானே என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சாரப் பயணம் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் தகவல் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் சென்னையில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திமுகவின் தேர்தல் அறிக்கை போதும் அதுவே நாங்கள் வெற்றி பெற உதவும். சென்னை மாநகர துணை மேயர் பதவியை பயன்படுத்தி பெஞ்சமின் ரூ.800 கோடிக்கு ஊழல் செய்திருக்கிறார்.
பிரச்சாரம் செய்யப் போகும் இடமெல்லாம் செய்வீர்களா? செய்வீர்களா? என்று மக்களை பார்த்து கேட்கிறார் ஜெயலலிதா. மாறாக செய்துவிட்டோம் என்று கூறி வாக்கு கேட்க வேண்டியது தானே. கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றவில்லை.
அந்த காரணத்தால் தான் அவரால் செய்ததை கூறி வாக்கு கேட்க முடியவில்லை என்றார்.