சென்னை ஏன் 'மிதக்கிறது' தெரியுமா?
சென்னை: கனமழையால் சென்னையே புரட்டிப் போடப்பட்டுள்ளது என்றால் மிகையில்லை. அந்தளவிற்கு சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மழையளவு குறைந்துள்ள போதும், பல இடங்களில் மழை நீர் வெள்ளமென சூழ்ந்துள்ளதால் மக்கள் நோய்த்தொற்று அபாயத்திலேயே உள்ளனர்.
மழையால் சென்னை இந்தளவிற்குப் பாதிக்கப்பட அதன் நிலப்படுகை தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

நிலப்படுகை...
தமிழகத்தின் தலைநகரான சென்னை 178 கி.மீ., பரப்பளவு கொண்டது. இது, கடல் மட்டத்தில் இருந்து 6 - 10 மீட்டர் உயரத்தில் உள்ளது. சென்னையின் நிலப்படுகையானது நீரை குறைவாக உறிஞ்சும் தன்மை கொண்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மழைநீரின் இயல்பு...
பொதுவாகவே மழைநீரானது மேடான நிலப்பரப்பில் இருந்து பள்ளமான நிலப்பரப்பை நோக்கி ஒடி வரும் இயல்பைக் கொண்டது. தண்ணீரானது 5 கி.மீ., முதல், 10 கி.மீ., வரை பயணம் செய்தால் தான், ஒரு மீட்டர் பள்ளம் உள்ள இடம் கிடைக்கும். எனவே, கடல் மட்டத்தில் இருந்து உயரமான பகுதிகளில் பெய்யும் மழை நீர் தாழ்வான பகுதிகளுக்கு செல்வது இயற்கை. இந்த தண்ணீர், ஐந்து கி.மீ., முதல், 10 கி.மீ., வரை பயணம் செய்தால் தான், வடிய வழி ஏற்படும்.

இது தான் காரணம்...
எனவே தான் மேடான பகுதிகளில் பெய்யும் பருவமழையானது சென்னையை நோக்கி ஓடி வருகிறது. சென்னையின் நிலப்படுகை, மோசமாக இருப்பதால், அந்த நீரை உறிஞ்சுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் தான், சென்னை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி மிதக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பூகோள அமைப்பு...
மேலும், பூகோள அமைப்பின்படி, மிகப்பெரிய புயலுக்கோ அல்லது மழை காலத்திற்கோ வாழ ஏற்ற இடமாக சென்னை இல்லை என்பது அவர்களது கருத்து. எனவே தான் மற்ற மாவட்டங்களைப் பார்க்கிலும் சென்னையில் மழை நீர் வடிய அதிக நாள் ஆகிறது.

சொந்தவீடு ஆசை...
இதுதவிர, பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இடம்பெயரும் மக்கள், இங்கேயே சொந்தமாக வீடு வாங்கி செட்டிலாக விரும்புகின்றனர். இதனால், புறநகர்களானது விரிவடைந்து கொண்டே செல்கிறது.

ஆக்கிரமிப்பு...
குடியிருப்புகளுக்கு அதிக இடம் தேவைப்படுவதால் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இத்தகைய இடங்கள் தான் மழையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.

தலைநகரை மாற்றும் திட்டம்...
ஏற்கனவே, எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்த போது, சென்னை இதே போன்றதொரு வெள்ளத்தைச் சந்தித்தது. அப்போது, தலைநகரை திருச்சிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் இயல்பு நிலை திரும்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை...
மழையளவு குறைந்ததால் தற்போது பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருகிறது. ஆனால், இந்த வெள்ளத்தையும், அதன் பாதிப்புகளையும் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் பாதிப்பு இதை விட மோசமானதாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications