திருப்பத்தூரில் தேன்மொழி.. மறுநாளே சென்னையில் உயிரை விட்ட கணவன்.. கல்யாணமான 6 மாதத்தில் சோகம்
திருப்பத்தூர்: திருப்பத்தூரைச் சேர்ந்த தேன்மொழி என்ற பெண் திருமணம் ஆன 6 மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், போலீசாரின் விசாரணைக்கு பயந்த கணவன், அடுத்த நாளே சென்னையில் உயிரை விட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த 40 வயதாகும் அருண்குமார் சென்னை கே.கே.நகரில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான 31 வயதான தேன்மொழி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருண்குமார் தனது மனைவி தேன்மொழியை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்கு போய் விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தேன்மொழி வீட்டில் தனிமையில் இருந்த நிலையில், திடீரென ஒரு அறைக்குள் சென்று தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இது குறித்து பெண்ணின் உறவினர்கள் தேன்மொழியின் இறப்புக்கு காரணமான அவரது கணவர் அருண்குமார் உள்பட அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். இதனிடையே புகாரை வாங்க மறுத்ததால் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதை தொடர்ந்து போலீசார் புகாரை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யும் வரையில் தேன்மொழியின் உடலை வாங்க மாட்டோம் என மறுத்து போலீசாரிடமும், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோரிடம் கூறிய அவர்கள், நேற்று காலை வரையில் பிணத்தை வாங்க மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே மனைவி இறந்த தகவலை அறிந்த அருண்குமார், போலீசார் தன்னை தேடுவதை அறிந்து சென்னையில் தான் தங்கி இருந்த வீட்டிலேயே தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.. இதுகுறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு தூக்கிட்ட நிலையில் இருந்த அருண்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இறந்த அடுத்த நாளே கணவனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications