அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கும் இந்தியா இலங்கையிடம் மட்டும் பணிவது ஏன்?: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கேப்ரகடே கைது செய்யப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவில் அமெரிக்க தூதரகத்துக்கும், தூதரகப் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் சலுகைகளையும் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்திருக்கிறது.

மத்திய அரசு

மத்திய அரசு

வெளிநாட்டில் இந்தியத் தூதர் ஒருவர் கைது செய்யப்பட்டதும், அவரது தகுதிக்கு குறைவான முறையில் நடத்தப்பட்டதும் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்ற முறையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. இந்தியாவின் இறையாண்மைக்கு எங்கிருந்து, எப்போது சவால் விடப்பட்டாலும் அதற்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெண் என்றும் பாராமல் இந்தியத் தூதரை அமெரிக்க காவல்துறையினர் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதற்கு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

குர்ஷித்

குர்ஷித்

வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒருபடி மேலே போய், தேவயானியை மீட்டு வரும்வரை ஓயமாட்டேன் என மாநிலங்களவையில் சபதம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் இந்திய அமைச்சர்கள் பலமுறை அவமதிக்கப்பட்ட போதெல்லாம் அமைதியாக இருந்த மத்திய அரசு, இப்போதாவது இறையாண்மையை காப்பதற்காக அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள்

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதி அளித்த மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் இந்தியத் தமிழர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதி குறித்து பேச அனுமதி மறுத்திருக்கிறது. தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்களக் கடற்படையினருக்கு, தமிழகத்தின் எதிர்ப்பை மீறி இந்தியாவில் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அல்லாத உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க மக்களவைத் தலைவர் மறுத்திருக்கிறார்.

இலங்கை

இலங்கை

இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்றும், அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது இருதரப்பு உறவை பாதிக்கும் என்பதால் அது பற்றிய விவாதத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் மக்களவைச் செயலகத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதியிருக்கிறது. அதன்பேரில் தான் சிங்களப்படையினருக்கு பயிற்சி தருவது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு

கச்சத்தீவு

இதற்கு முன் கச்சத்தீவு பகுதியில் சிங்களப்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது குறித்தும், தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக உறுப்பினர்கள் கோரினர். அப்போதும், நட்பு நாடான இலங்கை குறித்து விவாதிக்கக் கூடாது என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதால் அனுமதி மறுக்கப்பட்டது.

இனப்படுகொலை

இனப்படுகொலை

அதேபோல் எல்லையில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மத்திய அரசு, இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் அவமதிக்கப்பட்டதற்காக அமெரிக்காவின் உறவையே துண்டித்துக் கொள்ள துணிந்த இந்திய அரசு, ஓர் இனத்தையே அழித்த இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கூட மறுப்பது கண்டிக்கத்தக்கது.

இலங்கையிடம் பணிவது ஏன்?

இலங்கையிடம் பணிவது ஏன்?

அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். இலங்கைப் பிரச்னையில் இனியும் இரட்டை நிலையை மேற்கொள்ளாமல், அமெரிக்காவிடம் காட்டிய அதே அணுகுமுறையை, தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கையிடமும் இந்தியா காட்ட வேண்டும். இல்லாவிட்டால், இதற்குக் காரணமானவர்களுக்கு தமிழக மக்கள் சரியான நேரத்தில், சரியான பதிலடி தருவார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+