செந்தில் பாலாஜி குறிவைத்து தாக்கப்படுவது ஏன்? திமுக ஆதரவாளர்கள் கூறுவது என்ன?
கோவை: 2024 மற்றும் 2026 தேர்தல்களில் பாஜகவை கொங்குப்பகுதியில் இருந்து மொத்தமாக துடைத்தெறிந்து விடுவார் என்ற பயம் பாஜக விற்கு வந்து விட்டது, அந்த பயம் காரணமாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் என திமுக ஆதரவாளர் ஷபீக் கூறியுள்ளார்.
மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். கரூரைச் சேர்ந்தவரான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீரென ரெய்டு மேற்கொண்டனர். இது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஆளும் கட்சி அமைச்சரான செந்தில் பாலாஜி, திமுகவின் மிகவும் பவர்புல்லான இரண்டு துறைகளை கைவசம் வைத்துள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கரூர் மாவட்டத்தின் அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றியதால், முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவராக மாறி முக்கியத்துறையின் அமைச்சராகவும் மாறினார்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் அங்கு திமுக மாநகாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. சட்டசபை தேர்தலில் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியிலும் திமுக தோற்றிருந்த நிலையில், மாநகராட்சி தேர்தல்களில் கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய வெற்றியை செந்தில் பாலாஜி தேடிக்கொடுத்தார்.
இந்த சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையே (இருவருமே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்) ரபேல் வாட்ச் விவகாரத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. அண்ணாமலையை செந்தில் பாலாஜி கடுமையாக தாக்கி வந்தார். அண்ணாமலையும் செந்தில் பாலாஜியை டாஸ்மாக் மற்றும் மதுபான விவகாரங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த சூழலில் திடீரென ஐடி ரெய்டு கோவையில் இன்று நடந்திருக்கிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை வேண்டுமென்றே தூண்டுதலின் பேரில் நடப்பதாக திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
திமுக ஆதரவாளர் ஷபீக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: "பாஜக ஓரளவு வளர்ந்து கொண்டு இருந்த பகுதி கோவை-கொங்கு பெல்ட்.ஒரு கட்டத்தில் பாஜகவினர் கொங்கு நாடு தனி மாநிலம் கோஷம் எழுப்பும் அளவுக்கு குட்டி உத்திரப்பிரதேசமாக அந்தப்பகுதி மாறிக்கொண்டு இருந்தது.

செந்தில் பாலாஜி வருகைக்குப் பின் தனது அதிரடி அரசியல் செயல்பாட்டின் மூலம் அந்தப் பகுதி திமுக வசம் ஆனது.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தேர்தலில் மண்ணைக் கவ்வவிட்டு ஓடவிட்டார்.RSS,பாஜக மற்றும் அண்ணாமலையால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் ஒத்த ஓட்டு பாஜக எனும் அளவுக்கு பாஜக செல்வாக்கு கோவை-கொங்கு பெல்டில் பாஜக அடிவாங்கியது. 2024 மற்றும் 2026 தேர்தல்களில் பாஜக வை அந்தப்பகுதியில் இருந்து மொத்தமாக துடைத்தெறிந்து விடுவார் செந்தில் பாலாஜி என்ற பயம் பாஜக விற்கு வந்து விட்டது.
அவரது அதிரடி அரசியல் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் பாஜக எப்பொழுதும் போல் தங்களது ஏவல் ஏஜென்சிக்கள் (ED,CBI,IT)மூலம் முடக்க நினைக்கிறது பாஜக. இதையெல்லாம் செந்தில் பாலாஜி முறியடித்து தனது வெற்றி நடையை தொடர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை." இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications