செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி பறிப்பு ஏன்? தலையை சுற்றவைக்கும் காரணங்கள்
சென்னை: சட்டசபையில் பட்டாசு கதை சொல்லி அசத்தி அமைச்சர் பதவி வாங்கியவர்கள் எல்லாம் அதிமுகவில் இருக்கிறார்கள். அமைச்சர் பதவி கொடுப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கொடுத்த அமைச்சர் பதவி பறிக்க காரணம் இல்லாமல் இருக்கிறது.
அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதுதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. என்னடா இந்த தமிழக அமைச்சரவைக்கு வந்த சோதனை என்று கூறும் விதமாக கடந்த 2011ம் ஆண்டில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாறியிருக்கிறார். ஒரு சிலரைத் தவிர யாருக்கு என்ன பதவி என்பது கூட அதிமுகவினருக்கே தெரியாது.

கிடுகிடு வளர்ச்சி
2000ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தது முதல் 2011ல் அமைச்சரானது வரை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக செந்தில் பாலாஜியின் வளர்ச்சியைக் கண்டு கரூர்வாசிகளே ஆச்சரியத்தில் வாய் பிளந்தார்கள்.

தேடி வந்த அமைச்சர் பதவி
2004ல் கரூர் மாவட்ட மாணவரணி செயலாளர், 2006ல் எம்.எல்.ஏ, 2008 முதல் மாவட்ட செயலாளர், கடந்த 2011 தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு 2வது முறையாக எம்எல்ஏ ஆன கையோடு போக்குவரத்து துறை அமைச்சரானார். ஜெயலலிதா பிறந்தநாளுக்காக போக்குவரத்து துறை சார்பில் மெகா ரத்ததானம் நடத்தி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற செய்தார்.

எடுபடாத புகார்கள்
செந்தில் பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர் மேலிடத்துக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டார். கட்சி மேலிடத்துக்கு செந்தில்பாலாஜியை பற்றி யாராவது புகார்கள் அனுப்பினால், அந்த புகார் மனுவின் நகல் அடுத்த நாளே அவருக்கு வருமாம். சம்பந்தபட்டவரிடம் அந்த புகாரை வாசித்து காட்டி மிரட்சியடைய வைப்பார் என்றும் கட்சியினர் சிலர் கூறுகின்றனர். இப்படி உச்ச நிலையில் இருந்த செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்தும், மாவட்ட செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

கார்டன் பாலிடிக்ஸ்
இளவரசியின் குடும்பத்தாருக்கு, மிகவும் வேண்டியவராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அதனால், கட்சியிலும், ஆட்சியிலும், அதிகாரம் பெற்றவராக வலம் வந்தார். மற்றவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல், தனக்கென தனி ராஜாங்கம் அமைத்து செயல்பட்டு வந்தார். இதுவே இப்போது இவரது பதவிக்கு வினையாக வந்து விடிந்துவிட்டது.

கார்டன் பாலிடிக்ஸ்தானாம்.
கடந்த ஜூன் மாதம் பள்ளி திறக்கும் நேரத்தில் தன்னுடைய குடும்பத்தைச் சென்னைக்கு மாற்றியிருக்கிறார் செந்தில் பாலாஜி. அவரது குழந்தைக்கு கோபாலபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் அட்மிஷன் போட்டிருக்கிறார். செந்தில்பாலாஜி குடும்பத்துடன் சென்னைக்கு மாறியது அதிகார மையத்தில் உள்ள ஒருவருக்கு பிடிக்கவில்லையாம்.

உள்கட்சித் தேர்தல்
அதிமுக உள்கட்சி தேர்தலில், கரூர் தவிர அருகில் உள்ள மாவட்டங்களிலும் தனக்கு வேண்டியவர் களை நியமிக்க செந்தில்பாலாஜி முயற்சிப்பதாக சமீபத்தில் கொங்கு மண்டல அதிமுக எம்பி ஒருவரே தலைமையிடம் புகார் அளித்திருந்தாராம்.

திமுகவினரிடம் நெருக்கம்
கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்தபோது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிதியில் அமைச்சரின் உறவினர்கள், கட்சிப் பிரமுகர்கள் ஆகியோருக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தந்த வகையில் ரூ.32.88 லட்சம் முறைகேடாக செலவிட்டார் என்று ஒரு புகார் கிளம்பியது. கடந்த ஜூன் 16ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் 18 பேர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த முறைகேடில் ஈடுபட்ட அதிகாரிகளை காப்பாற்ற செந்தில்பாலாஜி தரப்பு முயற்சி செய்வதாகவும் புகார் கிளம்பியது.

வேலைக்கு லஞ்சம்
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 6,000 புதிய பஸ்கள் வாங்கப்பட்ட நிலையில், பஸ் ஒன்றுக்கு, குறிப்பிட்ட தொகையை, கமிஷனாக பெற்றதாக கூறப்படுகிறது. போக்குவரத்து கழகங்களில், நடத்துனர்கள், ஓட்டுனர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனத்தில், அதிரடி வசூல் வேட்டை நடத்தப்படுவது குறித்து, மேலிடத்திற்கு தொடர் புகார்கள் குவிந்தன.

கை மாறிய பலகோடிகள்
போக்குவரத்துதுறையில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, பலரிடம் ஒரு லட்சம் முதல் 6 லட்சம் வரை வசூல் நடந்ததாகச் சொல்கிறார்கள். அமைச்சர் செந்தில்பாலாஜியின் பெயரைச் சொல்லி பல்லவன் இல்லத்தில் வேலை பார்க்கும் சிலர் வசூல் செய்துள்ளார்கள். ஆனால், இவர்கள் யாருக்கும் வேலையும் தரவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்
வசூல் செய்த பணத்தில் பாக்கித் தொகையையும் தரவில்லை. இதுதொடர்பாக அமைச்சரைச் சென்று பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்துள்ளனர். ஆனால் அதற்கு செந்தில் பாலாஜி, சரியான பதில் தரவில்லையாம். இதனையடுத்து பணம் கொடுத்தவர்கள் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் தயாராகியுள்ளனர்.

மூத்த தலைகளின் புகார்
கரூர் எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பி துரைக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையில், பனிப்போர் நிலவி வந்தது. அவர், செந்தில் பாலாஜி தொடர்பாக, சில ஆதாரங்களை, முதல்வரிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், மூத்த அமைச்சர்கள் இருவரும் புகார் தெரிவித்துள்ளனர்.

விவகார வீடியோ
அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலை நடத்த, ராமநாதபுரம் தொகுதி பொறுப்பாளராக, செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். இதில் திமுகவில் இருந்து அதிமுகவில் அண்மையில் இணைந்த நடிகரின் ஆதரவாளர்களுக்கு பதவிகள் கொடுக்கவில்லையாம். இந்த கடுப்பிலேயே, தருணம் பார்த்து நடிகர் போட்டு கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி குறித்து போயஸ் தோட்டத்துக்கு அனுப்பிய வீடியோ ஆதாரம் ஒன்று 'விவகாரமான' விவகாரம் என்றும் கூறப்படுகிறது.

பதவி நீக்க பரிந்துரை
இப்படி மொத்த புகார்களும் சேர்ந்து முற்றுகையிடவே, செந்தில் பாலாஜியை நீக்குவது என்ற முடிவுக்கு கடந்த வாரமே ஜெயலலிதா வந்துவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஜூன் 24 ஆம் தேதி இரவிலேயே ஆளுநர் மாளிகைக்கு பதவி நீக்கத்திற்கான பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு, செவ்வாய்கிழமையன்று ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொடுத்தவங்க வாங்கிட்டாங்க
செந்தில்பாலாஜியின் வீட்டுக்குப் போன ஆதரவாளர்கள் பலரும் பதவி பறிபோனது பற்றி வருத்தப்பட்டு பேசவே, ‘அம்மா கொடுத்தாங்க... எடுத்துகிட்டாங்க' என்று மட்டும்தான் திரும்பத் திரும்பச் சொன்னாராம்'

நீளும் மாஜிக்கள் லிஸ்ட்
முதல்வர் ஜெயல்லிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த கே.ஏ. செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாதவரம் மூர்த்தி ஆகியோரும் இதே போன்ற அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகி அமைச்சர் பதவியிழந்து தற்போது இருக்கும் இடமே தெரியாமல் இருக்கின்றனர். அதே லிஸ்ட்டில் இணைவாரா செந்தில் பாலாஜி அல்லது மீண்டும் அமைச்சராவாரா? அல்லது எம்.எல்.ஏவாகவே பின் வரிசையில் அமர்ந்து விடுவாரா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications