7 பேரையும் விடுவி்க்க சு.சாமி ரூபத்தில் ஜெயலலிதாவுக்கு முட்டுக்கட்டை வரலாம்...!
சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தாலும் கூட அது அவருக்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது என்று கூறப்படுகிறது.
காரணம், சுப்பிரமணியம் சாமி என்ற டென்ஷன் எப்போதுமே எதையாவது இடைஞ்சலாக செய்தபடிதான் இருக்கும். இந்த விவகாரத்திலும் சாமி தனது முட்டுக்கட்டையை டெல்லியில் வைத்து அரங்கேற்றுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபையில் நேற்று ஜெயலலிதா பேசும்போது, ராஜீவந் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு மத்திய அரசின் பொருத்தமான நடவடிக்கைகாக அனுப்பப்படும். மத்திய அரசிடமிருந்து 3 நாட்களுக்குள் உரிய பதில் வராவடி்டால், இவர்களை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு மாநில அரசே விடுதலை செய்யும் என்று தெரிவித்திருந்தார் ஜெயலலிதா.
ஆனால் இந்த நடவடிக்கையை ஜெயலலிதா மேற்கொள்ள பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்கிறார்கள்.

மத்திய அரசு சம்மதிக்காது
முதலில் ஜெயலலிதாவின் முடிவுக்கு மத்திய அரசு நிச்சயம் சம்மதம் தெரிவிக்காது. அதை தற்போது மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு நிரூபித்துள்ளது.

தடை வரலாம்
மத்திய அரசு ஜெயலலிதா முடிவை எதிர்த்து தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம், இந்த 3 நாட்களுக்குள் ஜெயலலிதா அரசு, தனது முடிவை அமல்படுத்த இடைக்காலத் தடை கூட விதிக்க வாய்ப்புள்ளது. அல்லது ஒரு வேளை மத்திய அரசின் மனு மீதான விசாரணை முடியும் வரை, ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடையும் கூட விதிக்கலாம்.

வேறு யாரேனும் வழக்குத் தொடர்ந்தால்
அதேபோல வேறு யாரேனும், உச்சநீதிமன்றத்தை அணுகி தமிழக அரசு மேல் நடவடிக்கை எடுக்கத் தடை கோரி வழக்குத் தொடர்ந்தால் அந்த வழக்கை, உச்சநீதிமன்றம் அனுமதித்தாலும், இடைக்கால தடை விதிக்கப்படலாம்.

சுப்பிரமணியசாமி இருக்காரே...
இந்தத் தடையை நிச்சயம் வேறு யார் கோராவிட்டாலும் கூட சுப்பிரமணியம் சாமி கோருவார் என்று பலத்த அச்சம் கலந்த எதிர்பார்ப்பு உள்ளது. அவர் இதுபோல செய்துள்ளார் பலமுறை. எனவே இ்ந்த முறையும் அவரது முட்டுக்கட்டைக்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

ஜெ.வை பலமுறை டென்ஷனாக்கியவர்
இன்று ஜெயலலிதா சந்தித்து வரும் பல வழக்குகள், பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்த சாமிதான். மேலும் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரானவர், ஏன் ஈழத் தமிழர் போராட்டத்திற்கும் கூட எதிரானவர்தான். எனவே நிச்சயம் அவர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஜெயலலிதா விடுதலை செய்வதை அவர் விரும்ப மாட்டார், நிச்சயம் தடை ஏற்படுத்த முயல்வார் என்று தெரிகிறது.

அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு
தமிழக அரசின் முடிவுக்கு ஏற்கனவே சுப்பிரமணியம் சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் எதிர்த்து வழக்குப் போடுவாரா என்பது குறித்து இன்னும் அவர் உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பார்த்த பிறகே தனது அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார்.

புத்திசாலி ஜெயலலிதா - சாமி
ஜெயலலிதா குறித்து சாமி கூறுகையில், ஜெயலலிதா புத்திசாலிப் பெண்மணி. சோனியா காந்தியையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும் மிகப் பெரிய நெருக்கடிக்குக் கொண்டு வந்து வைத்து விட்டார் என்றார் சாமி.

ஜெ.வுக்கு அதிகாரம் இல்லை
தொடர்ந்து அவர் பேசுகையில், ஏழு கைதிகளையம் விடுவிக்கு்ம் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு இல்லை. அப்படிச் செய்தால் அது 1973 சிஆர்பிசி சட்டத்தின் பிரிவு 435ஐ மீறுவதாக அமையும் என்றார் சாமி.

ஏன் முடியாது
இதுகுறித்து சாமி விளக்கம் தருகையில், ஒரு கைதிக்கு இரண்டு முறை தண்டனைக் குறைப்பு தர முடியாது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக தண்டனையைக் குறைத்துள்ளது. நளினியின் தூக்குத் தண்டனை ஏற்கனவே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டது. எனவே மறுபடியும் அவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு அதாவது விடுதலை தர முடியாது. ஆயுள் தண்டனைக்கு நமது சட்டத்தில் கால வரையறை குறிப்பிடப்படவில்லை என்பது சாமியின் விளக்கம்.

நளினியின் விடுதலையை தடுத்தவர் சாமி
கடந்த காலத்தில் நளினியை விடுதலை செய்ய திமுக அரசு முடிவு செய்தபோது, முயற்சித்தபோதும், இப்படித்தான் குறுக்கே புகுந்து தடுத்தார் சாமி என்பது நினைவிருக்கலாம். எனவே இந்த முறையும் ஜெயலலிதாவின் முடிவை குலைக்க அவர் முயற்சிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications