ஒரே மேடையில் பேச 20 தடவைக்கு மேல ஸ்டாலினை கூப்பிட்டும் பதில் வரலையே... வருத்தப்படும் அன்புமணி
சென்னை: அ.தி.மு.க. அரசு சாதனை குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சவால்விட்டு வருகிறார். என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என 20 தடவைக்கு மேல் கூறி வருகிறேன். ஆனால் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்தபதிலும் சொல்லவில்லை. இதற்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும் என்று அன்புமணி ராமதாஸ் மீண்டும் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
பா.ம.க. முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி வண்டலூரில் பா.ம.க. மாநில மாநாடு நடைபெறுகிறது. சுமார் 25 லட்சம் இளைஞர்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில், பல முக்கிய முடிவுகள், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சட்டசபைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.
அ.தி.மு.க. அரசு சாதனை குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் சவால்விட்டு வருகிறார். நானும் மு.க.ஸ்டாலினுக்கு 1 வருடமாக என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என 20 தடவைக்கு மேல் கூறி வருகிறேன். ஆனால், இதுவரைக்கும் அவர் எந்தவித பதிலும் சொல்லவில்லை. தி.மு.க.வின் தலைமையகமான அறிவாலயத்துக்கு கூட நான் வர தயாராக இருக்கிறேன். என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா? இதற்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும்.
கள்ளக்குறிச்சியில் மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணம் குறித்து தமிழக அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். மாணவிகள் கொலை செய்யப்பட்டார்களா? தற்கொலை செய்து கொண்டார்களா? என விசாரணை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திராவிட கட்சிகளால், மக்களின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. வருகின்ற 2016 சட்டசபைத் தேர்தலில் பா.ம.க. தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.