இன்னும் ஒரு வாரமாகும் ராம்குமார் பிரேதப் பரிசோதனைக்கு.. காவல்துறைக்கு ஏன் இந்த பிடிவாதம்?
சென்னை: காவல்துறை ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறது.. இந்தக் கேள்வியை எல்லோரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ராம்குமார் இறந்து இன்றோடு 6 நாட்களாகி விட்டது. ஆனால் பிரேதப் பரிசோதனை தொடர்பாக ராம்குமார் தரப்பு விடுத்து வரும் ஒரே ஒரு கோரிக்கையை ஏற்க காவல்துறை தொடர்ந்து மறுத்து வருவதால் பிரேதப் பரிசோதனை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த 18ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பும், சிறைத் தரப்பும் கூறியது. ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ராம்குமார் தரப்பும், பல்வேறு கட்சியினரும் கூறி வருகின்றனர்.
இதையடுத்து பிரேதப் பரிசோதனையின்போது அரசு மருத்துவர்களுடன், தங்களது தரப்பில் ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என்றும் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த தனி நபர் பெஞ்ச் (நீதிபதி சிவஞானம்) ராம்குமார் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது. இதை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. அதை ரமேஷ், வைத்தியநாதன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது இருவரும் ஆளுக்கு ஒரு தீர்ப்பைக் கூறினர்.
இதையடுத்து 3வது நீதிபதியாக கிருபாகரன் விசாரித்தார். அவர் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டரை உடன் வைக்க உத்தரவிட்டார். ஆக மொத்தத்தில் அரசு மருத்துவர்கள் மட்டும் போதும் என்ற தீர்ப்புதான் பெரும்பான்மையாக உள்ளது. இந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு பரமசிவத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இனி உச்சநீதிமன்றத்தில் பரமசிவம் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அது திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைதான் விசாரணைக்கு வரும். எனவே இன்னும் குறைந்தது ஒரு வாரத்திற்கு ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வாய்ப்பில்லை. இப்போதே 6 நாட்களாகி விட்ட நிலையில் மேலும் ஒரு வாரமாகும் நிலை ஏற்பட்டிருப்பதால் ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாமல் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போலீஸாரின் பிடிவாதம்தான் இந்த அவல நிலைக்குக் காரணம் என்கிறார்கள். அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்யப் போகிறார்கள். அவர்களுடன் ராம்குமார் தரப்பு டாக்டர் கூட இருக்கப் போகிறார். அவ்வளவுதான், அவர் பிரேதப் பரிசோதனையை செய்யப் போவதில்லை. செய்யப் படும் பரிசோதனையை அவர் கண்காணிப்பார். இதற்கு ஏன் போலீஸார் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
பல மூத்த வழக்கறிஞர்களும் கூட போலீஸாரின் பிடிவாதம் தேவையில்லாதது, ராம்குமார் தரப்பு கோரிக்கையில் நியாயம் உள்ளது. மிக மிக சாதாரண கோரிக்கைதான் , இதை ஏன் போலீஸார் தடுக்கிறார்கள், மறுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
காவல்துறையின் பிடிவாதத்தால் இப்போது ராம்குமார் குடும்பம் கோர்ட்டில் அலைகிறது.. ராம்குமாரின் உடலோ பிணவறையில் காத்துக் கிடக்கிறது.