தேர்தல் அரசியலுக்கு வர தயங்கும் ரஜினிகாந்த்? ரேஸில் முந்த துடிக்கும் கமல்ஹாசன்?
தேர்தல் அரசியலில் குதிக்க நடிகர் ரஜினிகாந்த் தயங்கும் அதேநேரத்தில் இந்த ரேஸில் முந்திவிட முனைப்பு காட்டுகிறார் நடிகர் கமல்ஹாசன்.
Recommended Video

சென்னை: அரசியல் களத்துக்கு வந்துவிட வேண்டும் என முனைப்பு காட்டினாலும் நடிகர் ரஜினிகாந்திடம் ஒருவித தயக்கம் இருக்கிறது. அதேநேரத்தில் தாம் ரஜினிகாந்துக்கு முன்னரே அரசியலில் குதித்துவிட வேண்டும் என்கிற வேகம் நடிகர் கமல்ஹாசனிடம் வெளிப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஒரு சிறிய காலி இடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த காலி இடத்தைக் கைப்பற்ற பெரும்பாலான கட்சிகள் முயற்சிக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் தேர்தல் நடைபெற்றால் திமுக வெல்வது உறுதி. அதேநேரத்தில் அதிமுகவுக்கும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கிறது. இதில் வேறு எந்த ஒரு கட்சிக்கும் வாக்களிப்போமே தவிர திமுகவுக்கு மட்டும் வாக்களிக்கவே மாட்டோம் என்கிற வகையில் கணிசமான வாக்கு சதவீதமும் அதிமுகவில் இருக்கிறது.

பாஜகவின் வியூகம் இதுதான்
இந்த கணிசமான வாக்குகளைக் கைப்பற்றுவதற்கான வியூகத்தைத்தான் பாஜக வகுத்து வருகிறது. பாஜக நேரடியாக களமிறங்கினால் இது சாத்தியமே கிடையாது என்பதால்தான் அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்ய அக்கட்சி காய்நகர்த்தி வருகிறது.

ரஜினி, கமல் இடையே போட்டி
அதேநேரத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனும் இந்த கணிசமான வாக்குகளை நோக்கித்தான் பயணிக்க தொடங்குகின்றனர். கமல்ஹாசனைப் பொறுத்தவரையில் ரஜினியை முந்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ரஜினி சிஸ்டம் சரியில்லை என பேச தொடங்கிய போதே அவருக்கு முன்பே நான் பேசிவிட்டேன் என்றார்.

ரஜினி- கமல் இடையே மோதல்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்கிற போது நான் எப்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றார். அதேபோல் கமல்ஹாசன் சிலநேரங்களில் பூடகமாக ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகள் பலவும் ரஜினிகாந்தை மறைமுகமாக சாடுவதாக இருந்ததாகவே கூறப்படுகிறது.

சிவாஜி மணிமண்டப விழா
இப்படியான திரைமறைவு மோதல்களின் உச்சம்தான் சிவாஜி கணேசன் மணிமண்ட திறப்பு விழாவில் நடந்தேறியது. அந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், சிவாஜிகணேசனின் தேர்தல் அரசியல் தோல்வியை சுட்டிக்காட்டி தமக்கு ஒருவித தயக்கம் இருக்கிறது என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

சிவாஜி மணிமண்டவிழாவில் ரஜினி பேச்சு
அத்துடன் நிற்காமல், தேர்தல் அரசியலில் வெல்வதற்கு சினிமா புகழ், பணம், செல்வாக்கை தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது... அது நிச்சயம் தமக்கு தெரியாது; ஒருவேளை கமல்ஹாசனுக்கு தெரிந்திருக்கலாம். அதுபற்றி ஒரு அண்ணனான நீங்கள் தம்பியிடம் சொல்லுங்கள் எனக் கேட்டால் என்னோடு வா என்கிறார் கமல்ஹாசன் என்றார். இதுதான் ஆகப் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

மக்கள் புறக்கணித்த ரஜினி
ரஜினிகாந்தைப் பொறுத்தவரை தேர்தல் அரசியலில் குதிக்க விரும்புகிறார்; ஆனால் 1996-ல் தாம் குரல் கொடுத்தபோது ஆதரவு தந்த தமிழக மக்கள் 1998-ல் புறந்தள்ளிவிட்ட வரலாறு போன்ற நிகழ்வுகள் அவரை ரொம்பவே யோசிக்க வைக்கிறது என்றே தெரிகிறது; ஒருவேளை கமல்ஹாசனையும் இணைத்துக் கொண்டு பயணிக்கலாம் என நினைத்து அவரிடம் ஆலோசனை கேட்டாரோ என்னவோ ரஜினிகாந்த்?

முழுவீச்சில் கமல்
மேலும் கமல்ஹாசன் அரசியலில் இறங்கினால் தன்னைப் போல சொதப்பாமல், முழு வீச்சில் இறங்குவார் என்பதும், அப்படி இறங்கினால் தனக்கு பெரும் பாதகமே ஏற்படும் என்பதையும் ரஜினி உணர்ந்திருப்பது போலவே தெரிகிறது. முன்பு ரஜினியின் பக்கம் முழுமையாக திரும்பியிருந்த மக்களின் ஃபோகஸ் இப்போது கமல்ஹாசன் பக்கம் மாறி விட்டதையும் அவர் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார்.

சாத்தியமற்ற இருதுவருவ அரசியல்
அதேநேரத்தில் தமிழக அரசியல் களத்தில் எம்ஜிஆர்- கருணாநிதி; கருணாநிதி- ஜெயலலிதா என்கிற இருதுருவ அரசியலை தாங்கள் முன்னெடுக்க விரும்புகிறார்களோ என்கிற சந்தேகத்தையும் அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர். அதாவது இனி தமிழக அரசியலில் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் என்கிற இருதுருவ அரசியலை நடத்தலாம் என இருவரும் கருத வாய்ப்புண்டு. ஆனால் சிந்தாமல் சிதறாமல் திமுகவின் 40% வாக்குகள் இருக்கும் நிலையில் இதற்கான சாத்தியம் இல்லை என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
அதாவது இனி தமிழக அரசியலில் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் என்கிற இருதுருவ அரசியலை நடத்தலாம் என இருவரும் கருத வாய்ப்புண்டு. ஆனால் சிந்தாமல் சிதறாமல் திமுகவின் வாக்குகள் இருக்கும் நிலையில் இதற்கான சாத்தியம் இல்லை என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து












Click it and Unblock the Notifications