விடிய விடிய கூவத்தூரில் சசிகலா ஏன் தங்கினார்?.. பரபர தகவல்கள்!
விடிய விடிய கூவத்தூரில் சசிகலா தங்கியது குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: கூவத்தூர் அதிமுக எம்.எல்.ஏக்கள் "சிறை முகாமில்" சசிகலா திடீரென இரவு தங்க முடிவு செய்ததன் பின்னணியில் பல பரபரப்பு தகவல்கள் உள்ளதாக முன்னாள் திமுக எம்.எல்.ஏ எஸ்.எஸ். சிவசங்கர் கூறியுள்ளார்.
கூவத்தூர் கூத்து குறித்து தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறார் சிவசங்கர். உள்ளே அடைபட்டுள்ள தனது நண்பர்கள் தகவல் தருவதாக சிவசங்கரே கூறியுள்ளார்.
இந்தநிலையில் இன்று சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு நாளுக்கு முன்னதாக நேற்று இரவு கோல்டன் பே ரிசார்ட்டுக்கு வந்த சசிகலா, அதிரடியாக இரவு அங்கேயே தங்கி விட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிவசங்கர் தனது முகநூலில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
திட்டமிட்டு தங்கினார்
அது நேற்றே திட்டமிட்டது. எம்.எல்.ஏக்கள் "நாங்கள் மட்டும் இங்கு தங்கி இருப்பதா?" என முனகுவதாக சசிகலா காதுக்கு செய்தி வந்தது. அவர்கள் முனகியதற்கு காரணம் சில அமைச்சர்கள் அங்கு தங்காமல் சென்னை சென்று வந்ததால். அதை எப்படி எடுத்துக் கொண்டாரோ சசிகலா, அவரே அங்கு தங்க முடிவெடுத்தார்.
அவர் தங்குவதால், அந்த அமைச்சர்களும் அங்கு தங்க வேண்டிய சூழல். இன்னொரு பக்கம் மதுரை எம்.எல்.ஏ சரவணன் தப்பி சென்றதும் காரணம் என சொல்லப்படுகிறது. அதற்கிடையில் தான் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு என்ற அறிவிப்பு வந்துவிட்டது. நாளை இரண்டு பிரச்சினையும் எப்படி முடியுமோ என்ற திக்திக்கில் எம்.எல்.ஏக்கள்.
ரணகளமாக இருக்கிறது ரிசார்ட்
அங்கு சசிகலா தங்கியதால் உடன் வந்த கூட்டமும் தங்க, இப்போது இன்னும் ரணகளமாக இருக்கிறது ரிசார்ட். உணவு கொடுப்பதற்குள் தடுமாறி விட்டார்கள். சசிகலாவுக்கு ரிசார்ட் ரெஸ்டாரெண்டிலேயே உணவு தயாராகி விட்டது. ரிசார்டிற்குள்ளேயே ஒரு உயர்ந்த சூட்டில் தங்கி விட்டார் சசிகலா. போயஸ் கார்டன் இல்ல அளவிற்கு வசதி கிடையாது.
ஆம்புலன்ஸ்
காலையிலேயே பரபரப்பாகி விட்டது ரிசார்ட். ஆம்புலன்ஸ் வந்த உடன் எல்லோருக்குமே திக் என்றாகி விட்டது. ஆனால் அப்புறம் தான் தெரிந்திருக்கிறது, அது ஜெனரல் செக்கப்புக்காக வந்தது என. இரண்டு நாட்களாகவே சிலர் மூக்கடைப்பு, சளி, மூட்டுவலி என்று சொல்லி வந்திருக்கின்றனர். தப்பித்து செல்ல சொல்கிறார்களோ என யோசித்து ஆம்புலன்சில் மருத்துவர்களை வரவழைத்து விட்டனர்.
பக்தவச்சலம் சிலை
மாலை 5.00 மணிக்கு சசிகலாவின் கான்வாய் ரிசாட்டில் நுழைந்தது. கிட்டத்தட்ட முதல்வர் வரும் போது இருக்கும் அத்தனை ஜபர்தஸ்த்துடனும். அவர் வருவதற்கு முன்பே எல்லோரும் குழுமி விட்டனர். ரிசார்ட் வரவேற்பறைக்கு முன்பாக ரிசார்ட்டை நிறுவிய பக்தவச்சலம் சிலை இருக்கிறது. அந்த இடத்தில் தான் கூடியிருந்தனர். காரை தொலைவில் பார்த்த உடனே டிபிகல் அதிமுக கும்பிடை போட்டனர். கார் அந்தக் கூட்டத்தில் தவழ்ந்து வர, "முதல்வர் சின்னம்மா" என்ற கோஷம். முகத்தில் புன்னகை. ரெட்டை விரல் அசைப்பு. ஜெ-வாகிப் போன சசிகலா. அப்புறம் தான் எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு.
தமிழகத்தின் "தலை சிறந்த" ஊடகங்கள்!
அங்கேயே பத்திரிக்கையாளர் சந்திப்பு. தமிழகத்தின் தலை சிறந்த இரு ஊடகங்களுக்கு மாத்திரமே உள்ளே அனுமதி. அந்த ஊடகங்கள் , "ஜெயா டிவி, தந்தி டிவி". மற்ற பத்திரிக்கைகள், ஊடகங்கள் கேட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு சிறிது நேர தரிசனம். நேற்றே தர்ணா செய்தவர்களை உள்ளே விட்டால் கலவரம் ஆகி விடும் என்ற பயம். சட்ட மன்ற உறுப்பினர்களிடம் ஒரு உருக்க, வீர, நவரச உரை. பிறகு முக்கிய தளகர்த்தர்களுடன் ஆலோசனை. தொடர்ந்து வரும் செய்திகளால் பரபரப்பு. எம்.எல்.ஏ சரவணன், மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன் ஓ.பி.எஸ்ஸிடம் அடைக்கலம். கவர்னர் இன்றும் இழுபறி என்று தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு என தொடர்ந்து சங்கடம் தரும் செய்திகள்.
டார்ச் அடித்துப் பார்க்கும் செங்கோட்டையன்
தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களில் யார் என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்பது யாருக்கும் புரியவில்லை. நம்புவதா, இல்லையா என்று புரியாத நிலை. பாதுகாப்புக்கு இருக்கும் ஆட்கள் கையாளும் விதத்தால் ஏற்பட்ட மனவருத்தங்கள். ரிசார்ட்டில் இருந்து தப்பிய எம்.எல்.ஏ சரவணன். இதனால் செங்கோட்டையனே களத்தில் இறங்கி விட்டார். ஸ்கூல் பியூப்பிள் லீடர் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். ஒவ்வொருவர் முகத்திலும் டார்ச் அடித்து வெளி ஆட்கள் யாரும் வந்துவிட்டார்களா என பார்த்துக் கொண்டிருக்கிறார். பரபரப்பாக கழிகின்றன நொடிகள்.
ரிசார்ட் ஓனர் சிம்பு ரசிகரோ!
ரிசார்ட் முன் இருக்கும் நிறுவனர் பக்தவச்சலம் சிலை அடி பீடத்தில் இருக்கும் வாசகம்,"நட்பிற்காக எதையும் விட்டுக் கொடுப்பேன். ஆனால் எதற்காகவும் நட்பை விட்டுக் கொடுக்க மாட்டேன்". # பரலோகத்தில் இருக்கும் ஜெயலலிதா ஆன்மாவே !!