அவங்கள ராஜினாமா செய்ய சொல்லுங்க, நாங்க ராஜினாமா செய்யுறோம்.. தமிழிசை கொந்தளிப்பு
சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று காவிரி பிரச்சனை தொடர்பாக சென்னையில் விவசாயிகள் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பங்கேற்றார். பின்னர், வெளியே வந்த அவரிடம், செய்தியாளர்கள் காவிரி நீர் பிரச்சனைக்காக பொன். ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து தமிழிசை பேசியதாவது:

காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் எம்பி ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். போராட்டம் நடத்திய தமிழக எம்பிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போராட்டம் நடத்த வேண்டியதுதானே? ஆனால் நாங்கள் அப்படி கூற மாட்டோம்.
காவிரியில் இருந்து தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக இருக்கிறது.இது தொடர்பான முழு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் அளித்திருக்கிறோம். மேலும், இதுகுறித்து வரும் 9ம் தேதி மத்திய தலைமையை சந்தித்து பேச உள்ளோம்.
அதே போன்று காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் போராட்டம் நடந்தால் அதில் தமிழக பாஜக பங்கேற்கும். ஆனால் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டம் நடந்தால் அதில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தமிழிசை கூறியுள்ளார்.
முன்னதாக, காவிரி பிரச்சனையில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும், விவசாயிகள் சங்கம்சார்பில் பி.ஆர். பாண்டியனும் பொன். ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications