மக்களுக்கு நல்லது செய்யாத இந்த அரசு தேவையா? - காங். எம்.எல்.ஏ விஜயதாரணி எக்ஸ்குளூசிவ் பேட்டி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. எடப்பாடி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும். அப்போது ஆட்சி கவிழும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி கூறியுள்ளார்.
நாகர்கோவில்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழ்நிலை உருவாகும். அப்போது ஆட்சி கவிழும். இந்த அரசால் மக்களுக்கு நன்மை இல்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி ஒன்இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ''முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது என மக்கள் அச்சப்படும் அளவுக்கு பல பயங்கரங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்துள்ள கொலை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டதையே காட்டுகிறது.
அங்கு அந்த கொலை ஏன் நடந்தது, எதற்காக நடந்தது என்பதை காவல்துறையினர்தான் புலனாய்வு மூலம் மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கருத்துக்களை கூறிவருவது, இந்த ஆட்சி நிலைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒபிஎஸ் என அனைவரும் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என கூறிவருகின்றனர். ஒருவேளை தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டால் நிச்சயம் ஆட்சி கவிழும்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகின்றன. மக்களுக்கு நன்மை தருகின்ற அரசைத்தான் மக்கள் விரும்புவார்கள். அப்படியான அரசுதான் தேவை. மக்களுக்கு எந்த நன்மையும் இந்த அரசு செய்யாது என்கிறபோது எதற்கு இந்த அரசு?'' - இவ்வாறு எம்.எல்.ஏ விஜயதாரணி கூறினார்.