சூர்யா தேவியைப் போலவே எஸ்.வி.சேகரையும் கைது செய்வார்களா?.. மக்கள் பெரும் எதிர்பார்ப்பு!
சென்னை: தமிழிசை சௌந்தரராஜன் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக வீடியோ வெளியிட்டது தொடர்பாக திருச்சி பெண் சூர்யாதேவியை சென்னை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், இதேபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சி மணப்பாறையை சேர்ந்த சூர்யாதேவி என்ற பெண், பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகளுடன் பேசிய ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் சென்னையில் தலைமறைவாக இருந்த சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சபாஷ் போலீஸ்
காவல்துறை மிக நேர்த்தியாக செயல்பட்டு, சூர்யா தேவியின் பின்புலத்தை கண்டறிந்து, அவர் எங்கேயுள்ளார் என்பதையும் கண்டுபிடித்து புகார் கொடுத்த சில நாட்களிலேயே சூர்யா தேவியை கைது செய்துள்ளது. இணையதளத்தின் வளர்ச்சியால் இதுபோன்ற ஆபாச அரசியலை முன்னெடுக்கலாம் என நினைத்த சூர்யா தேவி போன்றோருக்கு இந்த கைது நடவடிக்கை தக்க பாடமாக அமைந்துள்ளது. இனிமேல் இதுபோன்று எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி, ஆபாசமாக பேசி, பதிவு அல்லது வீடியோ வெளியிடும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மனசாட்சி உள்ளோருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்
அதேநேரம், உச்சநீதிமன்றமே ஜாமீன் மறுத்து, கைதுக்கு தடை இல்லை என்று கூறிய பிறகும், இதேபோன்ற ஒரு குற்றச்செயலில் ஈடுபட்ட எஸ்.வி.சேகர் என்ற நன்கு அறியப்பட்ட ஒரு நபரை காவல்துறை இன்னும் கைது செய்யாதது ஏன் என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது. அதிகாரம் உள்ளவர்களை காவல்துறை எதுவும் செய்யாது என்ற தப்பான மெசேஜை எஸ்.வி.சேகர் சம்பவம் மக்களுக்கு கொண்டு சேர்த்துவிடுமோ என்று ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அச்சப்படுகிறார்கள்.
வலுவான பின்னணி
எஸ்.வி.சேகர் முன்னாள் எம்எல்ஏ, பாஜகவில் இப்போது இருக்கிறார், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு நெருங்கிய சொந்தக்காரர் இப்படியெல்லாம் விஐபி அந்தஸ்தில் உள்ளார் எஸ்.வி.சேகர். எனவேதான் அவர் பெண் பத்திரிகையாளர் பற்றி பேஸ்புக்கில் ஷேர் செய்த மட்டமான ஒரு விஷயத்திற்காக சுப்ரீம் கோர்ட்டே தடுக்காத போதும் கூட கைது செய்யவில்லையோ என்ற எண்ணம் மக்களிடம் எழுந்தால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகிவிடும்.
மக்கள் மனநிலை
இப்போதே அதுபோன்ற எண்ணம் மக்களிடம் இருப்பதை சமூக வலைத்தள பதிவுகள் மூலம் பார்க்க முடிகிறது. இதை தவிர்க்க வேண்டுமானால், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி படு மட்டமாக பேசிய ஒரு பதிவை பகிர்ந்த எஸ்.வி.சேகரை கைது செய்வதில் காவல்துறை வேகம் காட்ட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.