ஜெயலலிதா உடல் நலம்... ஏன் தேவையில்லாமல் வதந்திகளை வளர விடுகிறது அரசு?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து தமிழக அரசு தெளிவாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் அரசு செயல்பட்டால் முதல்வர் உடல் நலம் குறித்து தேவையில்லாத வதந்திகள் பரவுவது தவிர்க்கப்படும் என்று பலரும் கூறுகிறார்கள். மேலும் இப்படி அடிக்கடி பரவும் வதந்திகளால் மக்களுக்குத்தான் தேவையில்லாமல் பல சிரமங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் புலம்புகிறார்கள்.
ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவ்வப்போது பரவும் வதந்திகளால் பொது மக்கள்தான் பெரும் பாதிப்பைச் சந்திக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர் இந்த வதந்திகளால் பாதியில் திரும்பும் நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நகர் முழுவதும் சிலர் தேவையில்லாமல் பீதி கிளப்பும் வகையில் செயல்படுவதால் பொதுமக்கள் வீடுகளுக்கு வேகமாக விரையும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நேற்று பகல் முழுவதும் காட்டுத் தீ போல பரப்பப்பட்டது வதந்தி. இதனால் அலுவலகங்களுக்குச் சென்ற பெண்கள் வேகமாக வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
கடைகளில் பெரும் கூட்டம்
பல பகுதிகளில் முதல்வர் குறித்து பரவிய வதந்தியால் பீதி அடைந்த மக்கள் கடைகளுக்குச் சென்று பால், பிஸ்கட், பிரட், மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றை வழக்கத்திற்கு அதிகமாக கேட்டு வாங்குவதைப் பார்க்க முடிந்தது.
தேவையில்லாத குழப்பம்
உண்மையில் அதிகாரிகளும், காவல்துறையினரும், மருத்துவமனை நிர்வாகமும்தான் இந்த குழப்பங்களுக்குக் காரணம் என்கிறார்கள். முதல்வர் குறித்து தேவையில்லாத பீதியை இவர்கள்தான் கிளப்புவதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்குள் யாரையும் விடுவதில்லை. முதல்வரைப் பார்க்க அமைச்சர்களுக்குக் கூட அனுமதி இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே முதல்வர் இருக்கும் அறை பக்கம் போக முடிகிறதாம்.
நர்சுகளுக்கு ஏன் கட்டுப்பாடு
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து ஷிஃப்ட்டுக்கு மூன்று நர்ஸ்கள் பணி அமர்த்தப்பட்டிருந்தனர். காலை, மாலை, இரவு என மூன்று வேளைக்கும் தலா ஒரு நர்ஸ் மட்டுமே உள்ளே செல்ல முடியும். முதல்வரின் தனி டாக்டர் சிவக்குமார் முதல்வர் உள்ள அறையிலேயே தங்கியுள்ளாராம். அவர் வெளியில் வருவதே இல்லையாம். அதேபோல நர்ஸ்களும் ஹாஸ்டலு்க்குப் போகத் தடையாம். அங்கேயே தங்கியுள்ளனராம்.
2வது மாடிக்குப் போகவே கூடாது
அதை விட முக்கியமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள 2வது மாடிப் பக்கம் கூட செல்ல யாருக்கும் அனுமதி கிடையாதாம். அந்த மாடி முழுவதையும் குத்தகைக்கு எடுத்தது போல நடந்து கொள்கிறார்களாம். இதனால்தான் தேவையில்லாத பல வதந்திகள், குழப்பங்கள் ஏற்படுவதாக கூறுகிறார்கள். மேலும் அப்பல்லோ மருத்துவனை இடையில் சில நாட்கள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. நேற்று பெரிய அளவில் வதந்தி பரவிய பிறகே அறிக்கை விட்டது. அப்பல்லோவின் அமைதியும் கூட வதந்தி பரவ முக்கியக் காரணமாகும்.
ஏன் இந்த மர்மம்
இப்படி எல்லாமே மர்மமாகவும், பரபரப்பாகவும் பதட்டமாகவும் இருப்பதால்தான் காட்டுத் தீ போல வதந்திகள் பரவுகின்றன. இதைக் கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு இதைக் கொண்டு வந்தாலே வதந்திகள் பரவுவது குறையும். குறைந்தபட்சம் முதல்வர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டாலே கூட போதும். மக்களுக்கும் அதிமுகவினருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். இதெல்லாம் செய்யாமல் அமைதி காப்பதால்தான் தேவையில்லாத வதந்திகள் பரவுவதாக சொல்கிறார்கள்.
வதந்தி பரப்புவோரை எச்ச்சரிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், வதந்தி பரவாமல் தடுக்க என்ன தேவையோ அதைச் செய்ய வேண்டியது முக்கியம் என்றும் மக்கள் கருதுகிறார்கள்.