ஜல்லிக்கட்டு.. அவசர சட்டம் கொண்டுவர சட்டத்தில் இடமிருந்தும் மோடி அரசு செய்யாதது ஏன்? பாஜக விளக்கம்
தார்மீக அடிப்படையில், உச்சநீதிமன்றத்தின் மாண்பு, மாட்சிமைக்கு பங்கம் வரக் கூடாது என்பதற்காக மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டுவரவில்லை என்கிறது பாஜக.
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கி அதை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர, மத்திய பாஜக அரசால் முடியும். இருப்பினும் அதை ஏன் கொண்டுவரவில்லை என்ற காரணத்தை அக்கட்சி பிரமுகர் வானதி ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
டிவி விவாத நிகழ்ச்சியில் இதுதொடர்பாக அவர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், அவசர சட்டம் கொண்டுவர சட்டத்தில் இடமுள்ளது.
ஆனாலும், தார்மீக அடிப்படையில், உச்சநீதிமன்றத்தின் மாண்பு, மாட்சிமைக்கு பங்கம் வரக் கூடாது என்பதற்காக மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டுவரவில்லை.
அக்கறை உள்ளது
உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில் மத்திய அரசு அதை மீறி ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. அந்த அறிவிக்கை செல்லுமா, செல்லாதா என்ற வழக்குதான் தற்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த வழக்கை ஓராண்டுக்கள் நடத்தி முடித்து தீர்ப்புக்காக காத்திருக்க செய்யும் அளவுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு துரித கதியில் வழக்கை நடத்தியது. அக்கறை இருப்பதால்தான் இவ்வளவு வேகமாக வழக்கை முடித்துள்ளோம்.
நடத்தியே தீருவோம்
எனவே, இந்த நிலையில் அவசர சட்டம் கொண்டுவராமல் நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு அது ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்தால் அப்போது மத்திய அரசு உடனே தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுத்து ஜல்லிக்கட்டை நடத்த செய்யும். இப்போது மவுனம் காக்க உச்சநீதிமன்றத்தின் மாண்பை நாம் மீறக்கூடாது என்ற ஒரே காரணம்தான். இவ்வாறு வானதி ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
நில கையகப்படுத்துதல்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே நில கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்து, அதை 3 முறை நீட்டித்ததே என்று சுப.வீரபாண்டியன் இடைமறித்து கேட்டபோது, "நில விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எந்த தடையையும் விதித்திருக்கவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஏற்கனவே தடையுள்ளது. அதுதான் வித்தியாசம்" என்றார் வானதி ஸ்ரீநிவாசன். மேலும், ஜல்லிக்கட்டு நடைபெறுமானால் அதை மோடி அரசுதான் செய்தாக வேண்டும். அதை செய்யும் என்றார் அவர்.
சு.சுவாமி
பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டில் கூறுகையில், ஜல்லிக்கட்டு நடத்த தேவையான வாதங்களை முன் வைத்துள்ளேன். ஜல்லிக்கட்டு நடைபெற்றால் அதற்கு நான் எடுத்த முயற்சிகளே காரணமாக இருக்கும். மிரட்டல்களால் எந்த வேலையும் நடக்காது என கூறியுள்ளார். வழக்கம்போல ஜல்லிக்கட்டு ஆதரவு போராளிகளை பொறுக்கிகள் என்று அவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.