அப்பவே தெரியும் விஜயகாந்த் வர மாட்டார்னு.. செம கடுப்பில் திமுக!
சென்னை: கிட்டத்தட்ட பலரும் எதிர்பார்த்தது போலவே அருள் நிதி திருமணத்திற்கு கடைசி வரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவே இல்லை. தனது மனைவியைக் கூட அவர் அனுப்பி வைக்கவில்லை. மாறாக மச்சான் சுதீஷை அனுப்பி வைத்து விட்டு ஒதுங்கி விட்டார்.
திமுக தலைவர் கருணாநிதியின் கடைசி மகன் மு.க.தமிழரசு. இவர் அழகிரி, ஸ்டாலினின் தம்பி. தமிழரசுவின் மகன் அருள் நிதி. நடிகராகவும் இருக்கிறார். இவருக்கும் கீர்த்தனாவுக்கும் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்திற்கான அழைப்பிதழை ஒவ்வொரு கட்சித் தலைவரையும் நேரில் சந்தித்துக் கொடுத்தார் மு.க.ஸ்டாலின். தம்பி மகன் கல்யாணம் வந்திருங்க என்று கூறி ஒவ்வொருவரையும் நேரில் போய் அழைத்தார்.
அவரது அழைப்பை ஏற்று பெரும்பாலான தலைவர்கள் வந்து விட்டனர். ஆனால் வராத பெருந்தலைகள் யார் என்றால் அது ப.சிதம்பரமும், விஜயகாந்த்தும்தான். தனது தாயாரின் மறைவைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரவில்லை.
ப.சிதம்பரம், விஜயகாந்த் வராததற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள். ஸ்டாலினோ, தமிழரசோ நேரில் வந்து தன்னை அழைக்கவில்லை என்பது ப.சிதம்பரத்தின் வருத்தமாம். மாறாக இவர்களின் சகோதரியான செல்விதான் சிதம்பரம் வீட்டுக்குப் பத்திரிக்கை வைத்திருந்தார். இளங்கோவனை நேரில் அழைத்த ஸ்டாலின் தன்னை நேரில் வந்து அழைக்காததை ப.சிதம்பரம் ரசிக்கவில்லையாம். இதனால்தான் அவர் போகவில்லையாம்.
விஜயகாந்த் வராததற்கு உருப்படியான காரணம் எதுவும் தெரியவில்லை. அவரைப் போலவே அவர் வராததும் பெரும் குழப்பமாக இருக்கிறது. ஆனால் விஜயகாந்த கல்யாணத்திற்கு வருவது சந்தேகம் என்று ஸ்டாலின் பத்திரிக்கை வைக்கப் போனபோது தெரிந்து விட்டது. அனைத்துத் தலைவர்களையும் அவர்களது வீட்டில் சந்தித்துதான் அழைப்பு கொடுத்தார் ஸ்டாலின். ஆனால் விஜயகாந்த் மட்டும் ஸ்டாலினை வீட்டுக்கு வரச் சொல்லாமல் தனது கட்சி ஆபீஸுக்கு வரச் சொல்லியிருந்தார்.
இது ஸ்டாலினுக்கே அதிர்ச்சி அளித்ததாக அப்போதே செய்திகள் வெளியாகின. தன்னை அவமானப்படுத்துவது போல விஜயகாந்த் நடந்து கொண்டதாக ஸ்டாலின் புலம்பியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் கல்யாணத்திற்கே வரவில்லை விஜயகாந்த். மாறாக வேறு ஒரு கல்யாணத்திற்குப் போய் விட்டார். அங்கு போய், அரசியல் பேச நான் வரவில்லை என்று கூறி ரொம்ப நேரம் அரசியல் பற்றி மட்டுமே பேசி விட்டு வந்தார்.
தனது மனைவி பிரேமலதாவையும் கூட விஜயகாந்த் திருமணத்திற்கு அனுப்பி வைக்கவில்லை. மாறாக மச்சான் சுதீஷை அனுப்பி வைத்திருந்தார். இது திமுக தலைவர் கருணாநிதி உள்பட அனைவருக்குமே வருத்தம்தானாம்.
டாக்டர் ராமதாஸ் இல்ல கல்யாணத்தின்போது பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி இல்லத் திருமண விழாவில் இதுபோன்ற பரபரப்பு ஏற்படாமல் போய் விட்டது












Click it and Unblock the Notifications