செல்போன் வாங்கியது குத்தமா... இந்தா வாங்கிக்கோ கட்டையடி... கணவனைப் போட்டுச் சாத்திய மனைவி!
கமுதி: புது செல்போன் ஏன் வாங்கினாய் என்று கேட்ட ஒரே காரணத்திற்காக தனது கணவனை உருட்டுக்கட்டையால் போட்டு வெளுத்து விட்டார் கமுதிக்காரப் பெண் ஒருவர். பாவம்,அடி வாங்கிய கணவர் போலீஸில் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கமுதி அருகே உள்ளது கோவிலாங்குளம் கிராமம். இதற்கு அருகே உள்ளது எருமைக்குளம் என்ற ஊர். இந்த ஊரைச் சேர்ந்தவர் தாமரை. இவருக்கு 45 வயதாகிறது. இவரது மனைவி பெயர் ஜெயலட்சுமி, இவருக்கு 40 வயதாகிறது.
ஜெயலட்சுமி சமீபத்தில் தனது கணவருக்குத் தெரியாமல் புதிதாக ஒரு செல்போன் வாங்கியுள்ளார். இது கணவருக்குத் தெரியவர, ஏன் என்னிடம் சொல்லாமல் செல்போன் வாங்கினாய் என்று கேட்டுள்ளார்.
இதனால் தாமரைக்கும், ஜெயலட்சுமிக்கும் சண்டையாகி விட்டது. அப்போது கோபமடைந்த ஜெயலட்சுமி, வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து போட்டு தாமரையை சரமாரியாக அடித்து விட்டார்.
லேசான காயத்துடன் தப்பிய தாமரை நேராக போலீஸுக்குப் போய் விட்டார். மனைவி தன்னை கட்டையால் அடித்து விட்டதாக அவர் புகார் கூற, போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்போது ஜெயலட்சுமியைக் கைது செய்துள்ளனர்.