11 வருஷத்திற்கு முன்பு சைக்கிளில் போன கணவரை கண்டுபிடித்து தர கோரி புகாருடன் வந்த பெண்!
கணவனை கண்டுபிடித்து தர பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு: பெண் ஒருவர் கொடுத்த புகாரினால் வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்தில் போலீஸார்கள் அதிர்ந்து உறைந்து போயுள்ளனர். அனைவரும் தலைசுற்றி கிறுகிறுத்து போய் உள்ளனர். அது என்னன்னுதான் படியுங்களேன்.
ஈரோடு மாவட்டம் செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். 54 வயது ஆகிறது. இவர் ஒரு கூலித்தொழிலாளி. மனைவி பெயர் செல்வி, இவருக்கு 51 வயது. இந்நிலையில், வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்துக்கு செல்வி வந்தார். வந்ததும், தன்னுடைய கணவர் ஆறுமுகத்தை காணவில்லை. கண்டுபிடித்து தாருங்கள் என்றார்.

சரிம்மா.. ஒரு புகாரா எழுதி கொடும்மா. நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர் போலீசார். சரி என்று புகாரும் எழுதி கொடுத்தார் செல்வி. அதை படித்த ஒவ்வொரு போலீசாரும் அதிர்ச்சியில்தான் உறைந்தனர்.
அதில், "2007-ம் ஆண்டு மார்ச் மாதம் தானும், தன் கணவனும் அங்கிருந்த ஒரு கோயிலுக்கு சைக்கிளில் சென்றோம். அப்போது, என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தன் அம்மா வீட்டுக்கு போவதாக சொல்லிவிட்டு சைக்கிளில் கணவர் சென்றுவிட்டார். 11 வருஷத்துக்கு முன்னாடி சைக்கிள்ல போனவர் திரும்பவும் வீட்டுக்கு வரவேயில்லை. அவருக்கு என்ன ஆச்சோ தெரில. எனக்கு தெரிஞ்ச எல்லா இடத்திலும் அவரை தேடி பார்த்துட்டேன். கிடைக்கவேயில்லை. அதனால் அவரை கண்டுபிடித்து தாருங்கள்" என்று எழுதியிருந்தார்.
இதைப்படித்த பின்னர் போலீசார் செல்வியிடம், ஏம்மா, எப்பவோ தொலைஞ்சு போனதுக்கு இப்போ வர்றீயே? 11 வருஷமா என்னமா பண்ணிக்கிட்டு இருந்தீங்க? என கேட்டனர். அதற்கு செல்வி, "இல்லீங்க... எனக்கு வெளி உலகமே தெரியாது. நான் யார் கூடவும் சரியா பேசமாட்டேன். அவரா வருவார் வருவார்-ன்னு எதிர்பார்த்துட்டே இருந்தேன். வரவேயில்லை. அப்போ சிலபேர் போலீசில் புகார் கொடுத்தா, கண்டுபிடிச்சு தருவாங்கன்னு சொன்னாங்க. அதான் இப்போ புகார் கொடுக்க வந்தேன்" என்றார்.
11 வருடங்களுக்கு பிறகு தொலைந்து போன கணவன் நினைவு வந்து மனைவி அளிக்க வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இப்பதான் புரியுது, அந்த கணவர் ஏன் செல்வியை விட்டுட்டு போயிட்டார்ன்னு....!!












Click it and Unblock the Notifications