மனஸ்தாபத்தால் தற்கொலை செய்த கர்ப்பிணி மனைவி- துக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை
கோவை: கோவையில் கர்ப்பிணியான மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் உயிரைவிட்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை கணபதி எல்.ஜி.பி நகர் சிவானந்தாமில் பின்புற முள்ள 3 ஆவது வீதியில் வசித்தவர் குருஸ்திவாகர். இவரது மனைவி சத்யா.

குருஸ்திவாகருக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தளிர்தலை. சத்யாவுக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் ஆகும். குருஸ்திவாகரும் சத்யாவும் காதலித்து வந்தனர். இவர் களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கடும் எதிர்ப்பையும் மீறி காதல் ஜோடி கரம் பிடித்தது. காதல் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் கோவை வந்தனர். குருஸ்திவாகர் இங்குள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். இனிய இல்லறத்தின் சாட்சியாக சத்யா கர்ப்பமானார்.
காதல் ஜோடியின் கதையை கேட்ட அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து இங்குள்ள வீடு அனைத்தும் உனது தாய் வீடுதான் என்று சத்யாவுக்கு 7 ஆவது மாதத்தில் தடபுடலாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். சத்யா கர்ப்பிணியான விபரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது.
கோபத்தில் இருந்த பெற்றோர் தணிந்து பிள்ளைகளிடம் போனில் பேசத்தொடங்கினர். குருஸ்திவாகர் தம்பி டேனியல் கோவை சரவணம்பட்டியில் தங்கி கேட்ரிங் வேலை செய்து வருகிறார். டேனியல் அடிக்கடி அண்ணன், அண்ணியிடம் போனில் பேசி வந்தார்.
சில முறை நேரில் சந்தித்தும் வந்தார். இன்று காலை குருஸ்திவாகருக்கு தம்பி டேனியல் போன் செய்தார். பலமுறை அழைத்தும் போனை எடுக்காததால் டேனியல் அண்ணன் வீட்டுக்கு வந்தார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
துவாரத்தின் வழியே பார்த்த போது குருஸ்திவாகரும், சத்யாவும் தூக்கில் பிணமாக தொங்கினர். அதிர்ச்சிடைந்த டேனியல் அலறி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தம்பதியின் உடலை மீட்டனர். வளைகாப்பு நடத்திய அப்பகுதி பொதுமக்கள் தம்பதியின் பிணத்தை கண்டு அழுகையையும் தாண்டி அதிர்ச்சியில் நிலைகுலைத்து போனார்கள்.
உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தியபோது கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் சத்யா முதலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாகவும் மனைவி இறந்த அதிர்ச்சியில் குருஸ்திவாகரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாகவும் தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications