கணவரைக் கொலை செய்த கள்ளக்காதல்.. மனைவி, கள்ளக்காதலுனுக்கு ஆயுள் சிறை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகிலுள்ள தாடிகாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூளை அதிபர் லிங்கண்ணன். இவரது மனைவி மாதம்மாள். மாதம்மாளுக்கும், கிருஷ்ணகிரி அருகிலுள்ள பாப்பாரப்பட்டியை சேர்ந்த வாடகை லாரி ஓட்டுனர் சிவக்குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

லிங்கண்ணன் வீட்டில் இல்லாத நேரத்தில், கள்ளக்காதலன் சிவக்குமாருடன் மாதம்மாள் உல்லாசமாக இருந்து வந்தார். இதையறிந்த லிங்கண்ணன், மாதம்மாளை கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த மாதம்மாளும், சிவகுமாரும் தங்களது கள்ளக்காதலுக்கு லிங்கண்ணன் இடையூறாக இருப்பதாக நினைத்து, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.
அதன்படி 2013, பிப்ரவரி, 20 ஆம் தேதி இரவு வீட்டின் மேற்புற ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தார் சிவக்குமார். மாதம்மாள், லிங்கண்ணனின் கையை பிடித்துக் கொள்ள, சிவக்குமார் தான் கொண்டு வந்த கத்தியால், லிங்கண்ணனை குத்திக்கொலை செய்தார்.
இதையடுத்து லிங்கண்ணனின் பிணத்தை, வீட்டு அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலுக்குள் புதைத்து வைத்தனர். மணல்குவியலுக்குள் இருந்த லிங்கண்ணன் உடல் நாற்றம் வீசியதை தொடர்ந்து, போச்சம்பள்ளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். இதில், மாதம்மாள் மற்றும் சிவக்குமார் ஆகியோர்தான் கொலை செய்திருப்பதை அறிந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. லிங்கண்ணனை கொலை செய்த அவரது மனைவி மாதம்மாள் மற்றும் அவரது கள்ளக்காதலன் சிவக்குமார் ஆகியோருக்கு நீதிபதி கமலாவதி ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் சிவக்குமாருக்கு 40 ஆயிரம் ரூபாயும், மாதம்மாளுக்கு 30 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications