ஹெல்மெட்டால் குழப்பம்.. கணவர் என்று நினைத்து வேறு நபர் பைக்கில் ஏறி பயணித்த மனைவி!
ஈரோடு: ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டுபவர்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியமாகும். கணவன் என தெரியாமல் இன்னொருவரின் பைக்கின் பின்னால் பெண் ஏறிச் சென்ற சம்பவம் ஈரோடு அருகே நடந்துள் ளது.
ஈரோடு அருகே உள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் மேகநாதன். இவரது மனைவி, ஜோதி. (பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன). இவர்கள் இருவரும் பருவாச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். மேகநாதன் வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும், கருப்பு ஹெல்மெட்டும் அணிந்திருந்தார்.

வெள்ளித்திருப்பூருக்கு வந்த மேகநாதன், அங்குள்ள ஒரு பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றார். முன்னதாக, பங்க்கின் நுழைவாயிலில் ஜோதியை இறக்கிவிட்டு உள்ளே சென்றார். மனைவி ஜோதி நின்று கொண்டிருந்த இடத்தில் வேறு ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தார்.
பெட்ரோல் நிரப்பி விட்டு பங்க்கை விட்டு வெளியே வந்த பைக்கில் ஜோதி ஏறிக்கொண்டார். பைக் சுமார் 2 கி.மீ தூரம் ஓடி அந்தியூர் செல்வதற்காக திரும்பியுள்ளது. அப்போதுதான், ஜோதி, "ஏனுங்க, பருவாச்சிக்கு போகாம, அந்தியூர் ரோட்டுல ஏனுங்க திரும்புறீங்க" கேட்டுள்ளார்.
அப்போதுதான், பைக்கை ஓட்டிச்சென்றவர் திடுக்கிட்டபடி ஹெல்மைட்டை கழற்றி பின்னால் திரும்பி பார்த்துள்ளார்.
அப்போதுதான் ஜோதிக்கு, பைக் ஓட்டிச் சென்றது வேறு ஒரு ஆண் என்று தெரியவந்துள்ளது. அவரும், தனது கணவன் வைத்துள்ள கம்பெனி பைக் மற்றும் கணவன் அணிந்திருந்ததை போன்ற வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்தது அப்போதுதான் ஜோதிக்கு புரிந்தது.
இதையடுத்து, தெரியாமல் பைக்கில் ஏறிய ஜோதியும், அவரை ஏற்றிக்கொண்ட நபரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். அதே பைக்கில் ஜோதியை ஏற்றிக்கொண்டு மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார் அந்த நபர். அங்கு ஏற்கனவே காத்திருந்த அவரின் மனைவி, அந்த பெண்தான் அடையாளம் தெரியாமல் ஏறிவந்தது என்றால், உங்களுக்கு ஏன் தெரியவில்லை என்று கணவரை திட்டி தீர்த்துள்ளார்.
இதை அந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சிரித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு, இப்போது ஊரெல்லாம் இந்த தகவலை பரப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications