திமிறும் எச். ராஜா.. கொந்தளிக்கும் அதிமுக எம்.பிக்கள்.. ஜெ. பாணி அதிரடி வருமா?
சென்னை: காவல்துறைக்கு மிகப் பெரிய "காவல் தெய்வமாக" விளங்கியவர் மறைந்த ஜெயலலிதா. அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரும் அப்படித்தான். ஆனால் நடு ரோட்டில் வைத்து காவல்துறையை கடுமையாக கொச்சைப்படுத்திய எச். ராஜா மீது பாயாமல் போலீஸாரின் கைகளை தமிழக அரசு கட்டிப் போட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் கடும் ஆச்சரியத்தையும், அதிருப்தியைும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
எச். ராஜாவின் பேச்சை காவல்துறையினரால் நிச்சயம் ஜீரணித்துக் கொள்ள முடியாது. வெட்கமாக இல்லையா, அசிங்கமாக இல்லையா, யூனிபார்மை கழற்றிப் போட்டுட்டுப் போங்க, லஞ்சம் வாங்கறீங்களே, நான் லஞ்சம் தர்றேன் என்று மிக மிக கடுமையான வார்த்தைகளை அனல் கொட்டிப் பேசுகிறார் எச். ராஜா. எதிரில் நிற்கும் காவல்துறை அதிகாரிகள் அப்படி அமைதி காத்தது இன்னும் ஆச்சரியமாக உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவிலேயே எச். ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு மேலும் இவரை சும்மா விடாது என்று அதிமுகவினரே கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

நடமாட விடக் கூடாது
இன்று சென்னையில் செய்தியாளர்களை அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், கோ அரி ஆகியோர் சந்தித்தனர். அப்போது இருவரும் எச். ராஜாவை கடுமையாக விமர்சித்தனர். இவரை நடமாடவே விடக் கூடாது என்று அருண்மொழி்த்தேவன் ஆவேசமாக பேசினார்.

நடவடிக்கை தேவை
அரி பேசுகையில், அவன் இவன் என்று பேசுகிறார். வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். இவர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நான் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து உரிமைப் பிரச்சினையை கொண்டு வரவுள்ளேன் என்றார்.

அதிமுக ஆட்சியிலா இப்படி
காவல்துறைக்கு எப்போதுமே அதிமுக ஆட்சி என்றால் அத்தனை சவுகரியமாக இருக்கும். காரணம், மறைந்த ஜெயலலிதா கொடுத்த சுதந்திரம். மாநிலம் அமைதியாக இருக்க வேண்டும். என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கங்க என்று லகானை காவல்துறை வசம் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. இதனால் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் காவல்துறையினர் படு ஹேப்பியாக இருப்பார்கள்.

ஆனால் இன்றைய பரிதாபம்
ஆனால் இன்று அதே அதிமுக ஆட்சியில் காவல்துறையின் நிலைமை பரிதாபமாக உள்ளது. எல்லா இடத்திலும் கெட்ட பெயர். தூத்துக்குடியாகட்டும், பாஜகவினரிடம் பம்மிப் போவதிலாகட்டும் காவல்துறையினர் பெரிய அதிருப்தியை சம்பாதித்துள்ளனர். பொதுமக்களிடையே வரலாறு காணாத அவப் பெயரையும் காவல்துறையினர் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது அல்லது உருவாக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் போய் பம்முவதா
எஸ்.வி.சேகர், எச். ராஜா போன்றோர் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். இஷ்டத்தி்ற்குப் பேசுகின்றனர். கேவலமாக பேசுகின்றனர். அசிங்கமாக பேசுகின்றனர். அவதூறாகப் பேசுகின்றனர். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகின்றனர். ஆனால் அவர்களை நோக்கி காவல்துறையினரால் சுண்டு விரலைக் கூட நீட்ட முடியவில்லை. ஏன் நிழலைக் கூட தொட முடியவில்லை. ஆனால் வேறு யாரும் சாதாரணமாக பேசினாலும் கடுமையான சட்டத்தில் கைது செய்து உள்ளே தூக்கிப் போடுகின்றனர். இதுதான முரண்பாடாக உள்ளது, பெரும் ஆச்சரியமாக உள்ளது.

அமைச்சர்கள் ஆதரவு - எம்.பிக்கள் எதிர்ப்பு
தமிழக அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் எச். ராஜாவுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். அவர் குற்றமே செய்யவில்லை என்ற ரீதியில் பேசி வருகின்றனர். ஆனால் தற்போது 2 அதிமுக எம்.பிக்கள் கொந்தளித்துள்ளனர். ராஜாவை நடமாடவே விடக் கூடாது என்று ஆவேசம் காட்டியுள்ளனர். இதனால் ராஜா விவகாரத்தில் அதிமுகவுக்கும், அரசுக்கும் இடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஜெயலலிதா இருந்திருந்தால்
நடு ரோட்டில் வைத்து காவல்துறையை கடுமையாக ஏசியுள்ளார் எச். ராஜா. ஆனால் போலீஸாரால் ஒன்றுமே செய்ய முடியலையே. கைது செய்ய முடியவில்லை. கண்டிக்க முடியவில்லை. இதுவே ஜெயலலிதா இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும். கருணாநிதி மீதே கை வைத்தவர் ஜெயலலிதா. எச். ராஜாவெல்லாம் எம்மாத்திரம்..! காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.

அரசு தன் பெயரைக் காக்க வேண்டும்
அதிமுக அரசு பாரபட்சமின்றி செயல்பட முன்வர வேண்டும். காவல்துறையை விமர்சிப்பது என்பது அரசையும் சேர்த்துத்தான் விமர்சிப்பதாக அர்த்தம். எனவே அதை உணர்ந்தும், ஜெயலலிதா இருந்திருந்தால் எப்படி செயல்பட்டிருப்பாரோ அதே போன்ற உறுதியுடனும், தமிழக அரசு இப்போதும் செயல்பட்டால்தான் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தவிர்க்கப்படும், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ முடியும் என்பதை அரசு உணர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications