மத்திய அரசுக்கு எதிராக அதிமுக எம்.பிக்கள் ராஜினாமா?
சென்னை: தமிழகத்தின் பிரச்சனைகளில் எப்போதும் பாராமுகமாக மத்திய அரசு இருப்பதை சுட்டிக்காட்டி அதிமுகவின் லோக்சபா எம்.பிக்கள் ராஜினாமா செய்யக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு விவகாரம், காவிரி நதிநீர், கூடுதல் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பி வருகிறார். ஆனால் தமிழகத்தின் குரலை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதே இல்லை என்ற குமுறல் இருந்து வருகிறது.
காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டபோதே மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்யக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டம் முடிந்தவுடன் மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தை அதிமுக முடுக்கிவிட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக தமிழகத்தின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவின் லோக்சபா எம்.பிக்களை ராஜினாமா செய்ய சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.