பென்னாகரத்தைப் பிடிப்பது எப்படி?.. "ஸ்கெட்ச்" போட்டு வாக்குகளைத் தூக்கும் பாமக!
சென்னை: சாதாரண திண்ணைப் பிரசாரத்தை வைத்து பென்னாகரத்தையே தனக்கு சாதகமாக பாமக திருப்பியுள்ளதாக சொல்கிறார்கள். சத்தம் போடாமல், ஸ்கெட்ச் போட்டு இங்கு களம் இறங்கியுள்ளது பாமக. இங்கு ஒரு லட்சம் வாக்குகளைக் குறி வைத்துக் களம் இறங்கியுள்ள பாமக, டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு இங்கு நிச்சயம் வெற்றி என்றும் கூறிக் கொள்கிறார்கள்.
அன்புமணியை முன்னிறுத்தி இந்த தேர்தலைச் சந்திக்கிறது பாமக. எந்தக் கட்சியும் செய்யாத அளவில் முதல் முறையாக முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்த கட்சி பாமக.
மிகுந்த முன்னேற்பாடுகள், திட்டமிடல்களுடன் காய் நகர்த்தி வந்த பாமக, அன்புமணியை பென்னாகரத்தில நிறுத்த முடிவு செய்து முன்கூட்டியே அங்கு தேர்தல் களத்தை தயார் படுத்த ஆரம்பித்து விட்டது.

பல மாத பணிகள்
அன்புமணி போட்டியிடும் தொகுதியை ரகசியமாக வைத்திருந்து பாமக இப்போதுதான் அறிவித்துள்ளது என்றாலும் கூட, பல மாதங்களுக்கு முன்பே அன்புமணிக்காக பென்னாகரத்தை தயார்படுத்த ஆரம்பித்து விட்டது.

இது வன்னியர்கள் கோட்டை.. !
பென்னாகரம் முழுக்க முழுக்க வன்னியர்களின் கோட்டையாகும். இங்கு அதிமுகவுக்கு அவ்வளவாக பலம் இல்லை. அதேசமயம், பாமக நல்ல செல்வாக்குடன் உள்ளது. திமுகவும் வலுவாகவே உள்ளது. இரண்டும் சம பலத்துடன் உள்ளவை என்று கூடக் கூறலாம்.

2 முறை பாமகவுக்காக
பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் 2 முறை பாமகவை தேர்ந்தெடுத்தவர்கள். பலமுறை பாமக வாக்கு வங்கியால் பிற கட்சிகள் ஜெயித்த வரலாறும் உண்டு. 2010 இடைத் தேர்தலில் பாமகவுக்கு பெருத்த நம்பிக்கையையும், திருப்புமுனையையும் ஏற்படுத்திய தொகுதியும் இது என்பதால் டாக்டர் ராமதாஸுக்கு மிகவும் பிடித்த தொகுதி பென்னாகரம்.

கிங் மேக்கர்
பென்னாகரம் தொகுதியில் பாமக கிங் மேக்கராக வலம் வருகிறது. இங்கு பல காலமாக திமுக, அதிமுகவுக்கு ஆதரவு அளித்து அவர்களை சட்டசபைக்கு அனுப்பிய கட்சி பாமக 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றது. ஆனால் பென்னாகரம் கிடைக்கவில்லை. இதனால் திமுக வேட்பாளர் இன்பசேகரனுக்காக பாமக சரியாக வேலை செய்யவில்லை. இன்பசேகரன் தோல்வியுற்றார்.

அன்புமணியை குஷியாக்கிய 89,654
பென்னாகரம் தொகுதியானது தர்மபுரி லோக்சபா தொகுதியின் கீழ் வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் இங்கு அன்புமணி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்த தொகுதி பென்னாகரம் தான். அங்கு அவருக்கு 89,654 வாக்குகள் கிடைத்தன. இந்த நம்பிக்கைதான் அன்புமணியை பென்னாகரம் வேட்பாளராக்கியுள்ளது.

நோ கவனக்குறைவு
பென்னாகரம் வாக்காளர்களில் பாதி பாமகவின் வாக்கு வங்கியா கருதப்படுகிறது. இருந்தாலும் கூட பாமக அலட்சியமாக இல்லை. மிகத் தீவிரமாக இங்கு வாக்கு சேகரித்து வருகிறது. திண்ணைப் பிரசாரத்தில் பாமகவினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு பக்காவாக தொகுதியைத் தயார்படுத்தி வைத்துள்ளனர்.

குருப் கூரூப்பாக
இளைஞர் கூட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் கூட்டி அவர்களிடையே பிரசாரம் செய்து பேசி, பின்னர் அவர்கள் போய் பிற ஊர்களில் பிரசாரம் செய்ய என்று திட்டமிட்டு செயலாற்றியுள்ளது பாமக. எதிர்க்கட்சியினரை இதைப் பார்த்து மிரண்டு போயுள்ளனராம்.

பெண்களிடம்
அதேபோல பெண்களிடையே மதுக் கொடுமையைக விளக்கிக் கூறி மது விலக்கு குறித்தும் தீவிரமாக பேசி வருகிறார்கள். அதற்கும் நல்ல பலன் கிடைத்துள்ளதாம்.

விடாதே பிடி
பென்னாகரம் தொகுதியை இப்படி அங்குலம் அங்குலமாக அலசி, ஆராய்ந்து தொகுதியின் பிரச்சினைகளை மக்களிடையே கொண்டு சென்று அதற்குத் தீர்வையும் கூறி ஆதரவு திரட்டி வருகிறது பாமக. கடந்த முறை கிட்டத்தட்ட 90 ஆயிரம் அளவுக்கு லோக்சபா தேர்தலின்போது இங்கு வாக்குகள் கிடைத்ததால் இந்த முறை 1 லட்சம் வாக்குகளைக் குறி வைத்துள்ளதாம் பாமக.
"லட்சாதிபதி" ஆவாரா அன்புமணி.. பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications