கெஜ்ரிவாலுக்கு கை கொடுத்த காங்... ஏன் நாராயணசாமிக்கும் "லிப்ட்" தரக் கூடாது??
Recommended Video

புதுச்சேரி: டெல்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையிலான மோதலில் கெஜ்ரிவால் அரசுக்கு காங்கிரஸ் கட்சிதான் பெரியஉதவி செய்துள்ளது. அதாவது சட்ட ரீதியான போராட்டத்தில் கெஜ்ரிவாலுக்காக ஆஜராகி வாதாடியவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆவார். அதே போல துணை நிலை ஆளுநர் கிரண் பேடியுடன் மல்லுக்கட்டி வரும் புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கும் காங்கிரஸ் சட்ட ரீதியான ஆதரவை நல்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி அரசின் வழக்கில் டெல்லி அரசு சார்பில் ப.சிதம்பரம், கோபால் சுப்ரமணியம், இந்திரா ஜெய்சிங், ராஜீவ் தவன் ஆகியோர் கொண்ட சட்டக் குழு வாதாடி பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
டெல்லி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கொடுத்துள்ள தீர்ப்பு தேசிய அளவில் ஆளுநர்களின் அதிகாரம் குறித்த புதிய விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதற்கிடையே, டெல்லி போலவே புதுச்சேரி விவகாரத்திலும் காங்கிரஸ் களம் இறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், கோரிக்கையும் கூடவே எழுந்துள்ளது.

புதுச்சேரியிலும் மோதல்
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருப்பவர் கிரண் பேடி. இவருக்கும், முதல்வர் நாராயணசாமி அரசுக்கும் தினசரி ஒரு சண்டை நடக்கிறது. நீயா நானா சண்டையால் புதுச்சேரி நிர்வாகம் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.

வந்த சந்தோஷமும் பாதியில் போச்சு
நேற்று சுப்ரீம் கோர்ட் டெல்லி அரசு வழக்கில் பிறப்பித்த தீர்ப்பால் புதுச்சேரியில் ஆளுங்கட்சியினர் பெரும் உற்சாகமடைந்தனர். கிரண்பேடிக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று அவர்கள் உற்சாகமாக பேட்டியும் அளித்தனர். ஆனால் அதை புஸ்ஸாக்கி விட்டது சுப்ரீம் கோர்ட் கொடுத்த விளக்கம். புதுச்சேரி வேறு, டெல்லி வேறு என்று கூறி விட்டது.

கிரண் பேடிக்கு வெயிட் ஏறியது
இது கிரண் பேடிக்கு முழுமையாக சாதகமாக மாறியுள்ளது. இனிமேல் அவரது செயல்பாடுகள் பன் மடங்கு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடிதான் அதிகரிக்குமே தவிர அவருக்கு இப்போதைக்கு நிவாரணம் கிடைப்பதாக தெரியவில்லை.

டெல்லி ஸ்டைலுக்கு மாறலாம்
கிரண் பேடியின் கிடுக்குப் பிடியிலிருந்து நாராயணசாமி அரசு தப்ப கெஜ்ரிவால் ஸ்டைலில் தர்ணா போராட்டம், சுப்ரீம் கோர்ட்டில் சட்டப் போராட்டம் என களம் இறங்கினால்தான் உண்டு. ஆனால் இதுவரை புதுவை காங்கிரஸ் அரசு அதுபோன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை. கெஜ்ரிவாலுக்கு கை கொடுத்த காங்கிரஸ், நாராயணசாமிக்கும் கரம் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது.

புதுவை மட்டும் தனியாக விடப்பட்டது ஏன்
இதற்கிடையே, பிற யூனியன் பிரதேசங்கள் எல்லாம் அரசியல் சட்டப் பிரிவு 239ஏவின் கீழ் வராத நிலையில் புதுச்சேரியை மட்டும் மத்திய அரசு ஏன் இந்தப் பிரிவில் வைத்துள்ளது. இதிலிருந்து நீக்குவதற்கான கோரிக்கையை புதுச்சேரி அரசு இதுவரை வைக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது

மக்கள் அரசுதானே இதுவும்
டெல்லியில் உள்ளது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. அதை மீறிய அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் நேற்று தனது தீர்ப்பில் மிகத் தெளிவாக கூறியுள்ளது. இதையும், அரசியல் சட்டப் பிரிவையும் முக்கிய வாதமாக எடுத்துக் கொண்டு புதுச்சேரி அரசும், சுப்ரீம் கோர்ட்டில் போய் நியாயம் கேட்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications