நாளை முடிகிறது கெடு.. அலுவலகம் வருவாரா தினகரன்?.. பெரும் பரபரப்பில் அதிமுக!
நாளையோடு கெடு முடிவடையும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்குத் தினகரன் வருவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் அதிமுகவிற்குள் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை: தினகரன் விதித்த 60 நாள் கெடு நாளையோடு முடிவடையும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைய நாளை வரை டிடிவி தினகரன் கெடு விதித்திருந்தார். ஆனால் இந்த இரண்டு அணிகளும் இணைவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை
இந்நிலையில், இரு அணிகளும் இணைவதற்கான எந்த முயற்சியும் எடுக்காததால், 4ம் தேதியான இன்று அதிரடியாகத் தனது முடிவுகளை அறிவிக்க உள்ளதாகத் தினகரன் அறிவித்திருந்தார்.
அடுத்தகட்ட நடவடிக்கை
மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை என்னென்ன எடுக்கப்படும் என்பதை நாளைப் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் தினகரன் அறிவித்திருந்தார். இதுதவிர, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கட்சியைப் பலப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.
கைப்பற்றப்படுமா கட்சி அலுவலகம்
இதனிடையே, தினகரன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்தைக் கைப்பற்றி விடுவார் என்ற பதற்றம் அதிமுகவில் ஏற்பட்டது. இதனால், அலுவகத்திற்கு முன் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்.
இன்று என்ன முடிவு
இந்நிலையில், இன்று முடிவுகளை அறிவிக்க உள்ளதாகக் கூறிய தினகரன் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதே போல், துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சிப் பணிகளை மேற்கொள்ளத் தினகரன் அலுவலகத்திற்கு வருவார் என்று தினகரன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
விரைவில் முடிவு
தினகரன் அதிரடியாக முடிவை எடுத்துவிட்டால் எடப்பாடி அணிக்கும் ஓபிஎஸ் அணிக்கும் சிக்கல் உருவாகிவிடும் என்பதால் அதனை எப்படிச் சமாளிப்பது என இரு அணிகளும் கூடிக் கூடி பேசி வருகின்றன. யார் என்ன செய்தாலும் நாளை இதற்கான முடிவு தெரிந்துவிடும் என்கின்றனர் அதிமுகவினர்.